மஞ்சுமெல் பாய்ஸ்
மஞ்சுமெல் பாய்ஸ் 
சினிமா

'மஞ்சுமெல் பாய்ஸ்' பட தயாரிப்பாளர்கள் மீது மோசடி வழக்கு... கேரள போலீஸார் அதிரடி!

காமதேனு

மலையாளத்தில் பெரிய ஹிட் அடித்த மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்கள் மூவர் மீது கேரள போலீஸார் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கொடைக்கானல் குணா குகையில் விழுந்தவரை, நண்பர்கள் எப்படி மீட்டார்கள் என்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட ’மஞ்சுமெல் பாய்ஸ்’ மலையாள திரைப்படம் அண்மையில் வெளியானது. இந்தப் படம் கேரளாவில் விட தமிழகத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. ஏனெனில், கதை நடக்கும் தமிழக பகுதி, கமல் நடிப்பில் வெளியான 'குணா' படத்தின் பாதிப்பு, 'கண்மணி அன்போடு காதலன்' எனும் பாடல் பயன்படுத்திய விதம் உள்ளிட்ட விஷயங்கள், தமிழ் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட பிரபலங்கள், படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினர். இதனால், சுமார் ரூ.20 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம், ரூ.200 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது.

’மஞ்சுமெல் பாய்ஸ்’ படக்குழுவினருடன் ரஜினிகாந்த்...

இந்நிலையில், அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் வலியத்தரா என்பவர் ’மஞ்சுமெல் பாய்ஸ்’ பட தயாரிப்பாளர்கள் மீது எர்ணாகுளம் சார்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில்,’ 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்துக்காக ரூ.7 கோடி முதலீடு செய்தேன். தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரர் ஷான் ஆண்டனி ஆகியோர் படம் வெளியான பிறகு தங்களுக்கு கிடைக்கும் லாபத்தில் 40 சதவீத பங்களிப்பை கொடுப்பதாக உறுதியளித்திருந்தனர். ஆனால், லாபம் மட்டுமல்லாமல் முதலீடு செய்த பணத்தைக்கூட திருப்பித் தராமல் ஏமாற்றிவிட்டனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

கமல்ஹாசனுடன் 'மஞ்சுமெல் பாய்ஸ்' படக்குழுவினர்...

இதை விசாரித்த நீதிமன்றம், 'மஞ்சுமெல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கும்படி உத்தரவிட்டது. மேலும், தயாரிப்பாளர்கள் 3 பேர் மீதும் மோசடி வழக்குப் பதிவு செய்யும்படியும் காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து தயாரிப்பாளர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இந்நிலையில், ’மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர்களான ஷான் ஆண்டனி, சவ்பின் ஷாஹிர் மற்றும் பாபு ஷாஹிர் ஆகியோர் மீது எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவுப்படி மரடு போலீஸார் மோசடி வழக்கை பதிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT