சினிமா

மகனுக்கு சொகுசு கார் பரிசளித்த நடிகை ரோஜா: விளாசித் தள்ளும் ரசிகர்கள்

காமதேனு

தனது மகனுக்கு ரூ.1.5 கோடி மதிப்பிலான சொகுசுக் காரை, நடிகையும் ஆந்திர அமைச்சருமான ரோஜா பரிசளித்திருப்பதை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. ரஜினி, விஜயகாந்த், பிரபுதேவா, பிரபு, சரத்குமார் உட்பட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். பின்னர் இயக்குநர் ஆர்.கே செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்சு மாலிகா என்ற மகளும் கவுசிக் என்ற மகனும் உள்ளனர்.

ஆந்திர அரசியலில் தீவிரமாக இறங்கிய அவர், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். இப்போது சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கிறார். இந்நிலையில் நடிகை ரோஜா, தனது மகனுக்கு ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் காரை பரிசாக வழங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலானது.

இதையடுத்து ரசிகர்களும் தெலுங்கு தேசம் கட்சியினரும் ரோஜாவை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ரோஜா சில வருடங்களுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில், தான் பணக்காரி அல்ல என்று குறிப்பிட்டிருந்தார். அந்த வீடியோவையும் இப்போது சொகுசுக் காருடன் இருக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ள ரசிகர்கள், ‘அமைச்சரானதால் ரோஜா அதிகமாகவே சம்பாதித்து வருகிறார்’ என்று கூறி வருகின்றனர்.

தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள், வசூல் ராணி என்று அவரை விமரித்துள்ளனர். தனது அப்பாயின்மென்ட்டுக்கே ரூ. 50 ஆயிரம் வாங்கும் ரோஜா, சொகுசுக் கார் வாங்குவது ஆச்சரிய மல்ல என்றும் விமர்சித்து வருகின்றனர். இதற்கு ரோஜாவின் ஆதரவாளர்கள், ஏராளமானத் திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ள ரோஜா, பென்ஸ் கார் வாங்க முடியாத அளவுக்கு மோசமான நிலையில் இல்லை என்று பதிலளித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT