‘மெய்ப்பட செய்’ பாடல் வெளியீட்டு விழாவில்...
‘மெய்ப்பட செய்’ பாடல் வெளியீட்டு விழாவில்... 
சினிமா

ரூ.6 கோடி வாங்கிவிட்டு விழாவுக்கே வருவதில்லை: நயன்தாராவை விளாசிய தயாரிப்பாளர்

காமதேனு

எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.தமிழ் செல்வம் தயாரித்துள்ள படம், ‘மெய்ப்பட செய்’. ஆதவ் பாலாஜி நாயகனாகவும், மதுநிக்கா நாயகியாகவும் நடித்துள்ள இந்தப் படத்தை வேலன் இயக்கியுள்ளார். படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இதில், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது,“தமிழ்ப் படங்களை விட மற்ற மொழி படங்கள் ஓடுகிறது என காழ்ப்புணர்ச்சியுடன் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழைப் பார்த்துதான், பாலிவுட்டிலேயே காப்பி அடித்து எடுத்தார்கள். தமிழ் சினிமா ஆண்ட மொழி, ஆளும் மொழி. இப்போது கதைகளில் பஞ்சம் இருக்கிறது. அதைச் சரி செய்ய இயக்குநர் சங்கத்தில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.

கே ராஜன்

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “இப்போதெல்லாம் நாயகிகள் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வருவதில்லை. நயன்தாரா, பாடல் வெளியீட்டுக்கு வருவதில்லை. அவர்கள் வந்து படம் ஓடாவிட்டால், அவர்களுக்குக் கெட்ட பெயராம். அதற்காகவா 6 கோடி வாங்குகிறார்? நடிகர், நடிகையரைத்தான் எல்லோரும் பார்க்கிறார்கள். அவர்கள்தான் படத்தை ஓடவைக்க வேண்டும். கதாநாயகர்களுக்குச் செலவு செய்வதற்கு பதில், கதைக்குச் செலவழிக்க வேண்டும்.

பிரபாஸ், ராம்சரண் போன்ற தெலுங்கு பிரபலங்கள் தோல்வியில் பங்குகொள்கின்றனர். தமிழ்நாட்டில் அப்படி இல்லை. நடிகர்கள் 100 கோடி வாங்கினால், எப்படி படம் எடுப்பது? நடிகர்கள் போனி கபூருக்கும், தெலுங்கு தயாரிப்பாளருக்கும் படம் கொடுக்கின்றனர். கஷ்டப்படும் தமிழ்த் தயாரிப்பாளர்களைக் கண்டுகொள்வதில்லை” என்றார்.

SCROLL FOR NEXT