சினிமா

25 நாட்களாக 300 நடனக்கலைஞர்கள் பங்கேற்க பிரம்மாண்ட செட்டில் படமாக்கப்பட்ட பாடல்: எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘பொன்னியின் செல்வன்’

காமதேனு

’பொன்னியின் செல்வன்’ படத்துக்காக, ஒரு பாடல் காட்சியை, 25 நாட்கள் படமாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

கல்கியின் புகழ்பெற்ற ’பொன்னியின் செல்வன்’ நாவலை, இயக்குநர் மணிரத்னம் படமாக்கி இருக்கிறார். இதில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன் உள்பட பலர் நடித்துள்ளனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இரண்டு பாகங்களாக படம் வெளியாக இருக்கிறது.

ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம், செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகும் இந்தப்படத்தில் நடித்துள்ள முக்கிய கேரக்டர்களின் தோற்றங்களைப் படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

இந்நிலையில் இந்தப் படத்தின் ஒரே ஒரு பாடலை மட்டும் 25 நாட்கள் படமாக்கியுள்ள தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது. பிரம்மாண்டமான செட்டில் நடந்த இந்தப் பாடல் காட்சியில் நடிகர், நடிகைகளுடன் சுமார் 300 நடனக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் 100 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். படத்தின் ஹைலைட்டான விஷயங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தப் பாடலைப் படக்குழு விரைவில் வெளியிட உள்ளது.

SCROLL FOR NEXT