சினிமா

7 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏஆர்ஆர் நிகழ்ச்சி: ஹெலிகாப்டரிலிருந்து குதித்து விளம்பரம் செய்த மலேசிய நிறுவனத் தலைவர்!

காமதேனு

மலேசியாவில் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொள்ளும் இசை நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக முறையில் அறிமுகம் செய்துவைத்திருக்கிறது, நிகழ்ச்சியை நடத்தும் டிஎம்ஒய் நிறுவனம்.

இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது ‘பொன்னியின் செல்வன்’, 'அயலான்’, ‘மாமன்னன்’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களுக்கும், இந்தி உள்ளிட்ட பிற மொழிப் படங்களுக்கும் இசையமைத்துவருகிறார். அவரது இசையமைப்பில் சமீபத்தில் வெளியான ‘கோப்ரா’, ‘வெந்து தணிந்தது காடு’ படங்களின் பாடல்களும் பின்னணி இசையும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. கூடவே, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொள்கிறார்.

டத்தோ முகமது யூசுப்

அந்த வகையில் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் 2023 ஜனவரி 28-ம் தேதி ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியாவில் அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்பது கூடுதல் விசேஷம்!

இந்நிலையில், இந்நிகழ்ச்சியை நடத்தும் டிஎம்ஒய் க்ரியேஷன் எனும் நிறுவனம் இதைப் புதுமையாகவும் பிரம்மாண்டமாகவும் விளம்பரப்படுத்த திட்டமிட்டது. அதன்படி, இந்நிறுவனத்தின் தலைவர் டத்தோ முகமது யூசுப், ஹெலிகாப்டரில் பறந்து சென்று 10,000 அடி உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

ஒரு நிகழ்ச்சிக்கு இந்த முறையில் விளம்பரம் வெளியிடுவது மலேசியாவில் இதுவே முதல் முறை ஆகும். இது ‘மலேஷியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ‘அதிக உயரத்தில் இருந்து குதிக்கப்பட்ட சாதனையாக வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!

SCROLL FOR NEXT