பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.
பல முன்னணி நடிகர்களின் படத்தை தயாரித்துள்ள பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் தற்போது பொன்னியின் செல்வன், இந்தியன் 2 உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் நீல்காந்த் நாராயண்கபூர் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், என்.பி.கே நரேந்திரமாரி என்ற பெயரில் கடந்த ஜூலை மாதத்தில் 26-க்கும் மேற்பட்ட இ-மெயில்கள் அனுப்பி பணம் பறிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. பணம் பறிக்கும் முயற்சியில் எங்கள் நிறுவனத்துக்கு தொடர்பு இல்லாத தகவல்களுடன் இ-மெயில்கள் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த ஜூலை 12-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை பல வணிக சம்பந்தமான மற்றும் வங்கிக் கணக்குகள், செல்போன் நம்பர்கள் பலரைப் பற்றிய தகவல்கள் அடங்கிய இ-மெயில்கள் அனுப்பப்பட்டுள்ளன.
தங்கள் பெயரை கெடுக்கும் வகையில் பல்வேறு இ-மெயில் முகவரிகளுக்கும் இது போன்ற தகவல்களை பரப்பி அவதூறு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து சைபர் க்ரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளோம். எங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் சட்ட நடவடிக்கைக்கு செல்வோம்" என்று கூறப்பட்டுள்ளது.