சினிமா

`தமிழால் இணைவோம்'- அனல் பறக்கும் சிம்பு, அனிரூத் ட்வீட்

காமதேனு

``தமிழால் இணைவோம்'' என்று ஒரே நேரத்தில் ட்வீட் போட்டு தெறிக்க விட்டுள்ளனர் நடிகர் சிம்புவும், இசையமைப்பாளர் அனிரூத்தும்.

"அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும். வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, ​​அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்" என்று டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது இது.

அமித் ஷாவின் இந்த பேச்சு நாடு முழுவதும் மட்டுமின்றி தமிழகத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் காட்டமாக ட்வீட் ஒன்றை பதிவு செய்தார். "ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்" என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்!. இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது. 'இந்தி மாநிலம்' போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித் ஷா நினைக்கிறாரா? ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது! ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது! ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்!" என்று கூறியிருந்தார்.

இதேபோல், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உள்பட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இசையமைப்பாளர் ஒரு ட்வீட்டை போட்டு திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த வரிசையில், தற்போது நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிரூத் ஆகியோர் ஒரே நேரத்தில், ``தமிழால் இணைவோம்'' என்று ட்வீட்டை தட்டியுள்ளனர். இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT