கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்  
சினிமா

கங்கனா ரனாவத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்: காரணம் இதுதான்?

காமதேனு

கங்கனா ரனாவத் ஒரு போலியான பகடி வீடியோவை உண்மை என்று நம்பி, அதற்கு கோபமாக இன்ஸ்டாகிராமில் பதிலளித்த சம்பவம் சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

இந்தி திரைப்பட நடிகையும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான கங்கனா ரனாவத், அவ்வப்போது தனது சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் ஒரு ஸ்பூப் வீடியோவை உண்மை என நம்பி கொந்தளித்த சம்பவத்தை நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்காக இந்தியாவை கண்டித்த கத்தார் ஏர்வேஸைப் புறக்கணிக்குமாறு 'வாசுதேவ்' என்பவர் ட்விட்டரில், "இந்து தெய்வங்களின் நிர்வாண உருவங்களை வரைந்த ஓவியர் எம்.எஃப் ஹுசைனுக்கு கத்தார் அடைக்கலம் கொடுத்தது. இதே கத்தார் தான் நுபுர் ஷர்மாவின் கருத்துகளைப் பற்றி எங்களுக்கு உபதேசம் செய்கிறது. கத்தார் ஏர்வேஸ் மற்றும் கத்தார் தயாரிப்புகளைப் புறக்கணிக்க வேண்டும்" என்று வலியுறுத்துகிறார்

இந்த வீடியோவுக்கு பதிலளிக்கும் வகையில், மற்றொரு ட்விட்டர் பயனர் கத்தார் ஏர்வேஸ் தலைவரின் ஒரு நேர்காணலை டப்பிங் செய்து ஒரு ஸ்பூப் வீடியோவை வெளியிட்டார். இதில், "வாசுதேவ் எங்களின் மிகப்பெரிய பங்குதாரர், அவரின் மொத்த முதலீடு ரூ.624.50. இனி எப்படி இயக்குவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. எல்லா விமானங்களையும் தரையிறக்கிவிட்டோம். எங்கள் செயல்பாடுகள் இனி இயங்காது" என்று கூறுவதுபோல டப் செய்திருந்தார்.

இந்த போலி வீடியோவை உண்மை என்று நம்பிய கங்கனா ரனாவத், "ஒரு ஏழையை கேலி செய்யும் இந்த கொடுமைக்காரனை உற்சாகப்படுத்தும் இந்தியர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் அனைவரும் இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், மக்கள் தொகை அதிகம் உள்ள இந்த நாட்டில் நீங்கள் அனைவரும் ஒரு பெரிய சுமை" என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கொந்தளித்தார்.

கங்கனா ரனாவத்

மேலும், “உன்னைப் போன்ற பணக்காரனுக்கு வாசுதேவ் ஏழையாகவும், முக்கியமற்றவனாகவும் இருக்கலாம். ஆனால் எந்தச் சூழலிலும் தன் துக்கத்தையும், வேதனையையும், ஏமாற்றத்தையும் வெளிப்படுத்த அவனுக்கு உரிமையுண்டு. இந்த உலகத்தைத் தாண்டி நாம் அனைவரும் சமமாக இருக்கும் ஒரு உலகம் இருப்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்று அவர் தனது அடுத்த ஸ்டோரியில் தெரிவித்திருந்தார்.

போலி ஸ்பூப் வீடியோவுக்கு கொந்தளித்த கங்கனாவின் பதிவுகளை நெட்டிசன்கள் கடுமையாக வறுத்தெடுக்க தொடங்கிய பின்னர் அவர் அந்த செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார்.

SCROLL FOR NEXT