சினிமா

சமூக வலைதளங்களில் இருக்கிறாரா நடிகர் விஜய்யின் மகன்?

காமதேனு

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சமூக வலைதளங்களில் இருக்கிறாரா என்பது பற்றி விஜய் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

பிரபலங்களின் பெயர்களில் சமூக வலைதளங்களில் போலியான கணக்கு தொடங்கி பதிவுகளை பகிர்வது பல ரசிகர்கள் செய்ய கூடிய ஒன்று. அதேபோல, சமீப காலங்களாக பிரபலங்களின் வாரிசுகள் பெயரிலும் இந்த மாதிரியான போலி கணக்குகள் தொடங்கி அதில் அவர்கள் குறித்து, பட அப்டேட் கொடுப்பது என செய்திகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த வரிசையில் நடிகர் விஜய்யின் மகனான சஞ்சய் பெயரில் சமூக வலைதள பக்கங்களில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு விஜய்யின் படங்கள் குறித்தான பல செய்திகள் பகிரப்பட்டு வந்தது. தற்போது விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தில் இருந்து ஒரு பாடல் காட்சியின் சில நொடிகள் இருக்கும் காணொளி ஒன்று வெளியாகி வைரலானது. இதனை அடுத்து படம் வெளியாவதற்கு முன்பே இது போன்று படங்கள், வீடியோக்கள் வெளியாவது அதிர்ச்சியாக இருக்கிறது. இதனை யாரும் சமூக வலைதளங்களில் மேற்கொண்டு பகிர வேண்டாம் என சஞ்சய் பெயரில் தொடங்கப்பட்ட போலி சமூக வலைதள கணக்கில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதனை அடுத்து, சஞ்சய் சமூக வலைதளங்களில் இருக்கிறாரா என்பது குறித்து விஜய்யின் மக்கள் தொடர்பாளர் ரியால் தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ‘நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் எந்தவொரு சமூக வலைதள பக்கத்திலும் இல்லை. அதனால், அவரது பெயரில் தொடங்கபட்டிருக்கும் போலியான கணக்குகளில் இருந்து வரும் செய்திகளை ஊக்குவிக்க வேண்டாம் என கேட்டு கொள்கிறோம்’ என அதில் தெரிவித்துள்ளார்.

கனடாவில் ஃபிலிம் மேக்கிங் தொடர்பான படிப்பை முடித்துள்ள நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் படங்கள் இயக்குவதில் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT