ராஷி கண்ணா
ராஷி கண்ணா 
சினிமா

“அந்த ஹீரோவுடன் நடிக்கும்போது பதற்றமாக இருந்தது” : ராஷி கண்ணா

காமதேனு

“நடிகர் அஜய் தேவ்கனுடன் நடிக்கும்போது, முதலில் பதற்றமாக உணர்ந்தேன்” என்று நடிகை ராஷிகண்ணா தெரிவித்துள்ளார்.

நடிகை ராஷி கண்ணா, ’இமைக்கா நொடிகள்’ மூலம் தமிழுக்கு வந்தார். அடுத்து ’அடங்கமறு’, ’அயோக்யா’, ’சங்கத்தமிழன்’, ’அரண்மனை 3’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இப்போது ’சர்தார்’, ’திருச்சிற்றம்பலம்’ படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே, பிரபல இந்திப்பட ஹீரோ அஜய் தேவ்கனுடன் ’ருத்ரா: த எட்ஜ் ஆப் டார்க்னஸ்’ என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இதன் மூலம் அஜய் தேவ்கனும் ராஷி கண்ணாவும் ஓடிடியில் அறிமுகமாகிறார்கள். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் அடுத்த மாதம் 4-ம் தேதி வெளியாக இருக்கும் இந்த கிரைம் தொடரில், ஈஷா தியோல், அதுல் குல்கர்னி, அஸ்வினி கல்சேகர், அசிஷ் வித்யார்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, மலையாளம், வங்காள மொழிகளில் இந்தத் தொடர் வெளியாக இருக்கிறது. லுதர் என்ற பிரிட்டிஷ் தொடரின் ரீமேக்கான இதில், போலீஸ் அதிகாரியாக அஜய் தேவ்கன் நடித்துள்ளார். அவருடன் நடிக்கும்போது முதலில் பதற்றமாக உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, ‘‘அவரை இதன் படப்பிடிப்புக்கு முன் பார்த்ததில்லை. அதனால் முதலில் அவருடன் நடிக்கும்போது பதற்றமாக உணர்ந்தேன். பழகிய பிறகு, அவர் எவ்வளவு எளிமையானவர் என்பதை புரிந்துகொண்டேன். அவருடன் உரையாடுவது எளிதாக இருந்தது. அவர் சில காட்சிகளில் நடிக்க உதவி செய்தார். அவர் அனுபவத்தின் மூலம் எனக்கு உதவாமல் இருந்திருந்தால், சில காட்சிகளை சரியாக செய்திருக்க முடியாது. அவரிடம் இருந்து நான் அதிகம் கற்றுக்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT