சினிமா

'முக்கியமானவரை விட்டுட்டேனே’: இயக்குநரிடம் மன்னிப்புக் கேட்ட ஹீரோ!

காமதேனு

பாடல் வெளியீட்டு விழாவில் பிரபல இயக்குநரின் பெயரை மறந்த ஹீரோ, அவரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

'சண்டக்கோழி 2' படத்துக்குப் பிறகு ’தி வாரியர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் லிங்குசாமி . இதில், தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் அவர் தமிழுக்கும் வருகிறார். கீர்த்தி ஷெட்டி ஹீரோயின். நடிகர் ஆதி வில்லனாக நடிக்கிறார். அக்‌ஷரா கவுடா, நதியா, பாரதிராஜா, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி - பவன் குமார் தயாரிக்கின்றனர். அடுத்த மாதம் 14-ம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் புல்லட் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் ’விசில்’ என்று தொடங்கும் இந்தப் படத்தின் அடுத்தப் பாடல் வெளியிட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது. இந்த விழாவில் பேசிய ஹீரோ ராம், படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றியும் படக்குழு மற்றும் இசை அமைப்பாளர், பாடகர்கள் உட்பட அனைவரின் பெயர் சொல்லி பாராட்டினார். ஆனால், இயக்குநர் லிங்குசாமி பெயரை மறந்துவிட்டார்.

இதை விழா முடிந்தபின் உணர்ந்த ராம், ட்விட்டரில் அவரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். "படத்தின் முக்கிய நபரை விட்டுவிட்டேன். இந்தப் படத்தின் ஒவ்வொரு பிரேமையும் உங்கள் தோளில் சுமந்திருக்கிறீர்கள் லிங்குசாமி சார். இதுவரை நான் பணியாற்றிய சிறந்த இயக்குநர்களில் நீங்களும் ஒருவர்" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT