சினிமா

விஜய் ஊட்டிவிட்ட உணவு, அனிருத்துடன் பார்ட்டி: சென்னை அனுபவங்களைப் பகிர்ந்த ஷாருக்கான்!

காமதேனு

‘ஜவான்’ படத்திற்காக சென்னையில் பணிபுரிந்த அனுபவத்தை நடிகர் ஷாருக்கான் பகிர்ந்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் நடிகர்கள் ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கக்கூடிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பை, சென்னை ஆகிய இடங்களில் நடந்தது. இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இதில் அட்லி மற்றும் ஷாருக்கானின் நட்பிற்காக படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ஒரு நாள் நடிகர் விஜய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படங்கள் அப்போது இணையத்தில் வெளியாகி வைரலானது. சென்னையில் உள்ள கோகுலம் செட்டில் தான் ‘ஜவான்’ படப்பிடிப்பு நடந்தது. இந்த செட்டிலேயே நடிகர் ரஜினிகாந்த்தின் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பும் நடந்து வந்ததால், நடிகர் ரஜினிகாந்த்தையும் சந்தித்து பேசியிருந்தார் ஷாருக்கான் என செய்திகள் அப்போது வெளியானது.

சென்னையில் நடந்த படப்பிடிப்பு அனுபவம் குறித்து ஷாருக்கான் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ‘’ஜவான்’ அணியுடன் 30 நாட்கள் என்னவொரு அனுபவமாக இருந்தது! தலைவர் ரஜினிகாந்தை பார்த்தது எனக்கு ஆசீர்வாதம். மேலும், நயன்தாராவுடன் படம் பார்த்தது, அனிருத்துடன் பார்ட்டி கொண்டாடியது, விஜய்சேதுபதியுடன் ஆழமான உரையாடல்கள், தளபதி விஜய் எனக்கு ருசிகரமான உணவை ஊட்டி விட்டது என அத்தனையும் அருமையான நினைவுகள். இவை அனைத்திற்கும் இயக்குநர் அட்லி மற்றும் அவரது மனைவி பிரியாவிற்கு நன்றி. சீக்கிரம் சிக்கன் 65 ரெசிப்பி சமைக்க கற்றுக் கொள்ள வேண்டும்’ என மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார்.

ஷாருக்கானின் இந்த ட்வீட்டிற்கு இயக்குநர் அட்லி, ‘என்னுடைய கரியரிலேயே மறக்க முடியாத படமாக இதை அமைத்துக் கொடுத்ததற்கு நன்றி சார். சென்னையில் படப்பிடிப்பு நடத்த அனுமதித்து 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெற செய்ததற்கு நன்றி. ‘king is a king always’’ எனக் குறிப்பிட்டு, சீக்கிரம் மும்பையில் ஷாருக்கானை சந்திக்க இருப்பதாகவும் அந்த ட்வீட்டில் தெரிவித்து இருக்கிறார் அட்லி.

SCROLL FOR NEXT