ஜெயம் ரவி நடிக்கும் ’அகிலன்’ படத்துக்காக, நடுக்கடலில் பிரம்மாண்ட சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
ஜெயம் ரவி, த்ரிஷா நடித்த ’பூலோகம்’ படத்தை இயக்கியவர் என்.கல்யாண கிருஷ்ணன். இவர் இப்போது இயக்கும் படம், ’அகிலன்’. இதிலும், ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கிறார். பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக நடித்து வருகின்றனர். ஜெயம் ரவியின் 28-வது படமான இதில் , மரைன் இன்ஜினீயராக அவர் நடிக்கிறார்.
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக் கும் இந்தப் படத்துக்கு விவேக் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். துறைமுகப் பகுதி பின்னணியில் உருவாகும் இந்தப் படத்துக்காக நான்கைந்து சரக்கு கப்பலை வாடகைக்கு எடுத்து ஏற்கெனவே காட்சிகளை படமாக்கி இருந்தனர். இந்நிலையில் நடுக்கடலில் செட் அமைத்து ஆக்ஷன் காட்சிகளை இப்போது படமாக்கி உள்ளனர்.
இதுபற்றி படக்குழுவிடம் கேட்டபோது, ``கோவளம் அருகே நடுக் கடலில், சில மிதவை பிளாட்பார்ம்களை உருவாக்கி செட் அமைத்து ஆக்ஷன் காட்சிகளைப் படமாக்கியுள்ளோம். கடற்கொள்ளையர்களுடன் ஜெயம் ரவி மோதுவது போன்ற காட்சி இது. பத்து நாட்கள் இந்தச் சண்டைக் காட்சிகள் படமானது. கிராபிக்ஸுடன் பார்க்கும்போது இந்தக் காட்சிகள் மிரட்டலாக இருக்கும். அதிக ரிஸ்க் எடுத்து இந்தக் காட்சி படமாக்கப்பட்டது'’ என்று தெரிவித்தது.