கடலுக்கு அடியில் அஜித் பேனர்
கடலுக்கு அடியில் அஜித் பேனர் 
சினிமா

கடலுக்கு அடியில் 100 அடி ஆழத்தில் அஜித்துக்கு பேனர்: ரசிகர்களின் வேற லெவல் முயற்சி

காமதேனு

நடிகர் அஜித்தின் திரை உலக பயணத்தின் 30-வது ஆண்டை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள அவரது ரசிகர்கள் கடலுக்கு அடியில் 100 அடி ஆழத்தில் பிளக்ஸ் பேனர் வைத்து கொண்டாடியுள்ளனர்.

புதுச்சேரியில் உள்ள ப்ரெஞ்ச் சிட்டி அஜித்குமார் ரசிகர்கள் மற்ற ரசிகர்களை விட கொஞ்சம் வித்தியாசமானவர்கள். கரோனா காலகட்டத்தில் பசித்தால் எடுத்துக் கொள் என்று சாலையில் உணவு வைத்தார்கள். இரவில் சாலை ஓரங்களில் படுத்து தூங்குவதற்கு போர்வைகள் தருவார்கள். தலைக்கவசம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவார்கள். அனாதை இல்லங்களுக்கு அஜித்தின் பிறந்த நாளில் உணவு, உடை உள்ளிட்டவற்றை தருவார்கள். அஜித்தின் திரைப்படம் வெளிவந்தால் பிரியாணி வழங்குவார்கள்.

இப்படி வித்தியாசமான பல செயல்களை மேற்கொள்ளும் இந்த ரசிகர் மன்றத்தினர் அஜித்தின் திரை உலக பயணத்தின் 30-வது ஆண்டை வித்தியாசமாக கொண்டாட வேண்டும் என்று விரும்பியிருக்கிறார்கள். இதையடுத்து நடந்த ஆலோசனையில் கடலுக்கு அடியில் பேனர் வைக்க வேண்டும் என்பது திட்டமாக உருவெடுத்தது.

அதனை செயல்படுத்துவதற்காக புதுவையில் உள்ள ஸ்கூபா டைவிங் பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்களை அணுகியிருக்கிறார்கள். அவர்களும் இதற்கு ஆர்வத்தோடு சம்மதிக்க அதற்காக பேனரை தயார் செய்து நேற்று தங்கள் திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறார்கள்.

பயிற்சி பெற்ற வீரர்கள் மூவர் கடலுக்கு அடியில் பேனரை எடுத்துக்கொண்டு இறங்கி இருக்கிறார்கள். சுமார் 100 அடி ஆழத்தில் சென்றதும் இருவர் பேனரை விரித்து பிடித்துக் கொள்ள, ஒருவர் அதனை வீடியோவாகவும் புகைப் படமாகவும் எடுத்திருக்கிறார். இந்த செயல் ரசிகர்களின் அதீத ஆர்வத்தை காண்பித்தாலும் அவர்களின் வித்தியாசமான முயற்சி இன்று வெளியான கடலுக்கு அடியில் பேனர் வீடியோவால் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

SCROLL FOR NEXT