சினிமா

சுகேஷ் பணமோசடி வழக்கில் சிக்கிய பிரபல நடிகையின் சொத்துகள் முடக்கம்!

காமதேனு

பணமோசடி வழக்கில், நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு சொந்தமான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர், செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள், சினிமா பிரபலங்களுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி பலரை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளதாக புகார்கள் உள்ளன. அ.தி.மு.க. உடைந்ததும் இரட்டை இலை சின்னத்தை மீட்க, தினகரன் தரப்புக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் சுகேஷ், தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், அவர் மீது அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சாட்சியமாக சேர்க்கப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரூ.52 லட்சம் மதிப்புள்ள குதிரை, ரூ.9 லட்சம் மதிப்புள்ள 4 பாரசீக பூனைகள் உட்பட ரூ.5.71 கோடி அளவிலான பரிசுப் பொருட்களை சுகேஷ் சந்திரசேகர் அவருக்கு வழங்கியது தெரியவந்தது.

இந்நிலையில் ஜாக்குலினின் ரூ.7.27 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்க துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். அதில் ரூ.5.71 கோடி மதிப்பிலான பரிசு பொருட்களை சுகேஷ் கொடுத்திருக்கிறார் என்றும் ஜாக்குலினின் நெருங்கிய குடும்பத்தினர்களுக்கு 1 லட்சத்து 73 ஆயிரம் அமெரிக்க டாலர் மற்றும் 27 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் கொடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT