இசைஞானி இளையராஜா
இசைஞானி இளையராஜா 
சினிமா

இளையராஜாவுடன் இணையும் இயக்குநர் சுசி கணேசன்

ஏக்நாத்ராஜ்

சுசி கணேசன் இயக்கும் ‘வஞ்சம் தீர்த்தாயடா’ படத்துக்கு, இளையராஜா இசை அமைக்க ஒப்புதல் அளித்திருக்கிறார்.

‘பைவ் ஸ்டார்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சுசி கணேசன், விரும்புகிறேன், திருட்டுப் பயலே, கந்தசாமி, திருட்டுப் பயலே 2ஆகிய படங்களை இயக்கினார். இதையடுத்து, ‘திருட்டுப் பயலே’ படத்தை இந்தியில் ‘ஷார்ட்கட் ரோமியோ’ என்ற பெயரில் ரீமேக் செய்த அவர், இப்போது ‘திருட்டுப் பயலே 2’ படத்தையும் ’‘தில்ஹே கிரே’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்துள்ளார்.

இதையடுத்து, அவர் தமிழில் மீண்டும் படம் இயக்குகிறார். இவர் இயக்கும் படத்துக்கு ‘வஞ்சம் தீர்த்தாயடா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 80-களில் மதுரையில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை மையமாக வைத்து, இந்தப் படத்தை அவர் இயக்க இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில், இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்க ஒப்புதல் அளித்திருக்கிறார்.

இயக்குநர் சுசி கணேசன்

இதுகுறித்து இயக்குநர் சுசி கணேசன கூறும்போது, “கிராமத்து வாழ்க்கையில் ஊருணி தண்ணீரைப் பருகி வளர்ந்ததைப் போல இளையராஜா இசையையும் ஓர் உணவாக உண்டு வளர்ந்தவன் என்ற முறையில், எனது படத்துக்கு அவர் இசையமைப்பதை பெருமையாக எண்ணுகிறேன். என் முதல் படத்துக்கு இளையராஜா இசை அமைக்க வேண்டும் என்றிருந்த கனவு, நான் முதன் முதலாக தயாரிக்கும் படத்தில் நிறைவேறி உள்ளது. இந்தப் படத்தில் இளையராஜா இசை, படம் முழுக்க பயணிக்கும் கதாபாத்திரமாக இருக்கும்” என்றார்.

இயக்குநர் சுசி கணேசன், வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கைக் கதையையும் படமாக்க இருப்பதாகக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT