மருத்துவமனையில் பாபுவை சந்தித்த பாரதிராஜா... 
சினிமா

மிகப்பெரும் கலைஞனாக வந்திருக்க வேண்டியவன்... இயக்குநர் பாரதிராஜா உருக்கம்!

காமதேனு

திரைத்துறையில் மிகப்பெரும் கலைஞனாக வந்திருக்க வேண்டியவன் என நடிகர் பாபு மறைவிற்கு இயக்குநர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பாரதிராஜாவின் ‘என் உயிர் தோழன்’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் பாபு நேற்றிரவு உடல்நலக் குறைவால் காலமானார். தனது ஐந்தாவது படமாக ‘மனசார வாழ்த்துங்களேன்’ என்கிற படத்தின் படப்பிடிப்பு தான் அவரது மொத்த வாழ்க்கையையும் புரட்டிப் போட்டது. அந்தப் படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் டூப் போடாமல் நடித்ததால் அவர் எதிர்பாராத விபத்துக்குள்ளாகி முதுகுப் பகுதியில் அடிபட்டு படுத்த படுக்கையாகிப் போனார்.

நடிகர் பாபு..

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை திரையில் அறிமுகப்படுத்திய இயக்குநர் பாரதிராஜா நேரில் சென்று நலம் விசாரித்து தேம்பியழுத வீடியோ பலரையும் நெகிழச் செய்தது.

பாபுவின் 80 வயதான தாயார் மட்டுமே அவரை உடனிருந்து இறுதி வரை கவனித்து வந்தார். இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திரைத்துறையில் மிகப்பெரும் நட்சத்திரமாக வந்திருக்க வேண்டியவன். படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 30 வருடத்திற்கு மேலாக படுக்கையிலேயே தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்த "என் உயிர் தோழன்" பாபுவின் மறைவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்’ எனக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT