சினிமா

கண்ணீருடன் காத்திருக்கும் விஜய் ஆண்டனி... குவிந்த பிரபலங்கள்!

காமதேனு

நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அவரது உடல் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

பேட்மிட்டன் விளையாட்டில் ஆர்வம் கொண்டவரான மாணவி மீரா கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக மன அழுத்தத்திற்கான சிகிச்சை பெற்று வந்ததாக சொல்லப்படுகிறது. நேற்று பள்ளி விடுமுறை தினம் என்பதால் தன் தோழியை பார்க்க சென்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மீராவின் தோழிகளிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர்கள் மன்சூர் அலிகான், நடிகை குஷ்பு, தயாரிப்பாளர் தனஞ்செயன் என பலரும் மருத்துவமனைக்கு நேரில் விரைந்துள்ளனர்.

மேலும், ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது ஆறுதலை சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ராகவா லாரன்ஸ், ‘உங்கள் மகள் இறந்த செய்தி எனக்கு வருத்தமளிக்கிறது விஜய் ஆண்டனி சார். இது போன்ற கடினமான சமயத்தில் உங்களுக்கும் குடும்பத்திற்கும் வலிமை வேண்டும் என ராகவேந்திர சாமியிடம் வேண்டிக்கொள்கிறேன்’ என ட்வீட் செய்துள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், ‘என் இதயம் உடைந்து விட்டது. நீங்களும் உங்கள் குடும்பமும் வலிமையாக இருங்கள் சார். எனது ஆழ்ந்த வருத்தம்’ என ட்வீட் செய்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘விஜய் ஆண்டனியின் மகள் இறந்து விட்டார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. எந்த ஒரு குழந்தையும் தனியாக விடக்கூடாது. அவர்களின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்க வேண்டும். வாழ்க்கை மேடு பள்ளமாக சவாலாக தான் இருக்கும். எதுவாக இருந்தாலும் அதை உங்கள் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்காக தான் நாங்கள் இருக்கிறோம். ரிப் மீரா’ எனப் பதிவிட்டுள்ளார்.

நடிகர் சரத்குமார், ‘விஜய் ஆண்டனியின் மகள் இறந்த செய்தி என்பது எனது கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டு துயரமளிக்கிறது. விஜய் ஆண்டனிக்கும், பாத்திமாவுக்கும் எந்தவொரு ஆறுதலும் இந்த இழப்புக்கு ஈடு செய்ய முடியாது. கடவுள் தான் இந்த இழப்பை தாங்கிக் கொள்ளும் சக்தியைத் தரவேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT