சினிமா

'வாடகைத்தாய் மூலம் குழந்தைகளைப் பெற்றேனா?: புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பாடகி சின்மயி!

காமதேனு

நயன்தாரா-விக்னேஷ் சிவன் சர்ச்சைகள் அடங்குவதற்குள்ளாக, பின்னணி பாடகி சின்மயி வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றுள்ளதாக வதந்திகள் பரவின. அதற்குத் தனது இன்ஸ்டாகிராம் மூலமாக சின்மயி பதில் அளித்துள்ளார்.

பின்னணி பாடகி சின்மயிக்கும், நடிகர் ராகுலுக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதியினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்தது என்பதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர். தன்னுடைய கர்ப்ப காலம் குறித்து ரகசியம் காத்துவந்த சின்மயி தனக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதைக் கண்டு, அவரின் ரசிகர்கள் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியுடன் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர். அதேவேளையில் எதிர்மறை கருத்துக்களையும் சின்மயி எதிர்கொள்ள நேரிட்டது. திரையுலகைச் சேர்ந்த பிரபல கவிஞர் மீதும், பாடகர்கள் மீது சின்மயி பாலியல் புகார்களை ‘மீ டூ’ இயக்கத்தின் மூலம் முன்வைத்திருந்தார். அந்த சர்ச்சைகள் ஓய்ந்தாலும், அவருக்குக் குழந்தை பிறந்த நிலையில் சிலர் அவதூறான கருத்துகளை வெளியிட்டிருந்தனர்.

அதற்கு ட்விட்டரில் பதில் அளித்த சின்மயி, ‘பெண்ணியம் பேசும் மாநிலம் எனத் தமிழ்நாட்டைப் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறோம். ஆனால் அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் இதுபோன்ற சாக்கடைகளும் இருக்கத்தான் செய்கின்றன. இதனால்தான் நான் கர்ப்பமாக இருந்த விஷயத்தை சமூக வலைதளங்களில் தெரிவிக்கவில்லை. இதுபோன்ற சாக்கடைகளைச் சுற்றித்தான் நம் குழந்தைகளையும் வளர்க்க வேண்டிய நிலை உள்ளது. கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எனத் தெரிவித்திருந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக நயன்தாரா-விக்கேஷ் சிவன் தம்பதியினர் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தை பெற்ற விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதைத் தொடர்ந்து சின்மயி கர்ப்பமாக இருக்கும் படத்தை வெளியிடாதது குறித்தும், அவர் வாடகைத் தாய் மூலமாகக் குழந்தை பெற்றாரா எனக் கேள்வி எழுப்பியும் சிலர் பதிவுகளைப் போட்டு வந்தனர்.

இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் கர்ப்பமாக இருக்கும் போது எடுத்த படத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும், ‘நான் கர்ப்பமாக இருக்கும் போது எடுக்கப்பட்ட படங்களைப் பகிராததால் என்னிடம் வாடகைத் தாய் மூலம் குழந்தைகளைப் பெற்றீர்களா என பலர் கேட்கிறார்கள். நான் என்னை ஊடக வெளிச்சத்திலிருந்து பாதுகாத்துக் கொள்கிறேன் என்பது என்னை சுற்றியுள்ளவர்களுக்கு தெரியும்’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT