சென்னை வேளச்சேரியை சேர்ந்த சந்தோஷ் (27) ஸ்ரீ ருத்ர வன்னியர் சேனா என்ற பெயரில் இயக்கம் ஒன்றை நடத்தி வருகின்றார். இவர் கடந்த 8.11.21 அன்று வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் சமீபத்தில் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் அமேசான் ப்ரைம் என்ற ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ஜெய்பீம் படத்தில் வன்னிய இன மக்களை இழிவுப்படுத்தும் வகையிலும், கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது.
மேலும் வன்னியர் இன முன்னாள் தலைவர் குருவை இழிவுப்படுத்தும் உள்நோக்கத்துடன் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே ஜெய்பீம் பட இயக்குநர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
சந்தோஷ் அளித்த புகாரின் பேரில் போலீஸார் எவ்வித நடவடிக்கை எடுக்காததால், தனது புகாரில் வழக்கு பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிடுமாறு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இவரது மனு மீது விசாரணை நடத்திய சைதாப்பேட்டை நீதிமன்றம், இயக்குநர் ஞானவேல், நடிகர் சூர்யா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் வேளச்சேரி போலீஸார் விசாரணை நடத்தி இன்று ஜெய்பீம் பட இயக்குநர் ஞானவேல், நடிகர் சூர்யா ஆகிய இருவர் மீது 295(A) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.