சினிமா

`இரவு உணவு சாப்பிடாமல் எனக்காகக் காத்திருந்தார்'- பிரபாஸ் கொடுத்த பிரியாணியால் நெகிழ்ந்த சூர்யா!

காமதேனு

நடிகர் பிரபாஸ் கொடுத்துள்ள பிரியாணி விருந்து குறித்து நடிகர் சூர்யா நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார்.

தமிழைப் போலவே தெலுங்கிலும் நடிகர் சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ’கஜினி’ படத்தில் இருந்து தொடர்ந்து தன்னுடையப் படங்களைத் தெலுங்கிலும் டப் செய்து வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் நடிகர் சூர்யா. அவருடைய சமீபத்தியப் படங்களான ‘சூரரைப்போற்று’, ‘ஜெய்பீம்’ ஆகியப் படங்களும் தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்த நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ளப் பேட்டியில் நடிகர் சூர்யா, பிரபாஸூடனான நெகிழ்வான நிகழ்வு ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது, “ஒருமுறை நான் ஹைதராபாத்திற்கு படப்பிடிப்பிற்காக வந்தபோது, பிரபாஸ் என்னை இரவு உணவிற்காக அழைத்திருந்தார். நான் வருவதாக சொன்னேன். மேலும், அன்று மாலை 6 மணிக்குத் தொடங்க இருந்த படப்பிடிப்பு இரவு 8 மணிக்குத் தொடங்கி 11.30 வரை நடந்தது.

சூர்யா

இதனால், பிரபாஸை சந்தித்து அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். மேலும், இரவு உணவு ஹோட்டலில் இருந்தோ அல்லது புரொடக்‌ஷன் மெஸ் உணவோ என்றுதான் நினைத்திருந்தேன்.

படப்பிடிப்பு முடிந்ததும் ஹோட்டலில் பிரபாஸை சந்தித்தேன். என்னை சந்திக்கும் வரை அவர் இரவு உணவு சாப்பிடாமல் எனக்காகக் காத்திருந்தார் என்ற செய்தி எனக்கு அதிர்ச்சியளித்தது. அவர் அம்மா எனக்காக செய்த பிரியாணியை எனக்கு கொடுத்தார். என் வாழ்க்கையில் அதுபோன்றதொரு சுவையான பிரியாணியை நான் சாப்பிட்டதே இல்லை” என்று நெகிழ்வுடன் இந்த நிகழ்வை நினைவு கூர்ந்துள்ளார் நடிகர் சூர்யா.

SCROLL FOR NEXT