சினிமா

மன்னிப்புக் கேட்டார்... யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றார் - நடிகர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்!

காமதேனு

நடிகர் விஜய் பாபு மீது இளம் நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்துள்ள நிலையில், இன்னொரு பெண்ணும் புகார் தெரிவித்துள்ளார்.

மலையாள நடிகர் விஜய் பாபு, ஃபிரைடே ஃபிலிம் ஹவுஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். இவர் மீது, கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம் மலையாள நடிகை ஒருவர், கடந்த 22-ம் தேதி போலீஸில் திடுக்கிடும் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், விஜய் பாபு, சினிமாவில் வாய்ப்பு தருவதாகக் கூறி, கடந்த மார்ச் 13-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 14-ம் தேதி வரை, பலமுறை மயக்க மருந்துகளைக் கொடுத்து, தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என்றும் அதை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டுவதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து போலீஸார், விஜய் பாபு மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையே ஃபேஸ்புக் லைவ்வில் தோன்றிய விஜய் பாபு, தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்றும் அந்த இளம் நடிகையுடன் நடந்த சாட்-களையும் வெளியிட்டார். அப்போது அந்த நடிகையின் பெயரையும் அவர் வெளிப்படுத்திவிட்டார். இதற்காக அவர் மீது மற்றொரு வழக்கை பதிந்துள்ள போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விசாரணைக்கு பயந்து வெளிநாடு தப்பிச் சென்றுள்ள விஜய் பாபு , முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

இதற்கிடையே, அவர் மீது இன்னொரு இளம் பெண் ஒருவர் ஃபேஸ்புக்கில் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். அதில், கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம், தொழில்முறையில் விஜய் பாபுவை சந்தித்ததாகவும் அப்போது மது குடித்திருந்த அவர், தன்னையும் குடிக்க வற்புறுத்தியதாகவும் பிறகு முத்தம் கொடுக்க முயன்றதாகவும் தான் மறுத்ததாகவும் கூறியுள்ளார். தான் மறுத்தும் அவர் வற்புறுத்தியதாகவும் பிறகு மன்னிப்புக் கேட்ட அவர், இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் மலையாள சினிமாவில் நுழையும் தனது எண்ணத்தை விட்டுவிட்டதாகவும் முன்பின் அறிமுகமில்லாத தன்னிடமே இவர் இப்படி நடந்துகொண்டார் என்றால், எத்தனைப் பெண்கள் மோசமான அனுபவத்தை இவரிடம் எதிர்கொண்டிருப் பார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

SCROLL FOR NEXT