படப்பிடிப்பின்போது தனக்கும் தமன்னாவுக்கும் மோதல் நடந்தது உண்மைதான் என்று இயக்குநர் தெரிவித்தார்.
தமிழ், தெலுங்கு, இந்தியில் நடித்து வருகிறார தமன்னா. இவர் நடித்து கடந்த மாதம் 27-ம் தேதி வெளியான தெலுங்கு படம், ’எஃப் 3’. வெங்கடேஷ், வருண் தேஜ், மெஹ்ரீன் உட்பட பலர் நடித்த இந்தப் படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்த இந்தப் படத்தை அனில் ரவிபுடி இயக்கினார்.
இதன் படப்பிடிப்பில் தமன்னாவுக்கும், இயக்குநருக்கும் கடும் மோதல் நடந்தது என்றும், இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப் பட்டதாகவும் கடந்த மாதம் செய்திகள் வெளியாயின. இதுபற்றி இப்போது இயக்குநர் அனில் ரவிபுடி விளக்கம் அளித்துள்ளார்.
’படப்பிடிப்பில் தமன்னாவுடன் வாக்குவாதம் நடந்தது உண்மைதான். ஆனால் அது பெரிய சண்டை இல்லை. படத்தை அவசரமாக முடிக்கும் மனநிலையில் இருந்தோம். தமன்னாவுக்கு மறுநாள், வேறொரு ஷூட்டிங். அவர் அங்கு போக வேண்டும் என்பதற்காக, சீக்கிரமாக செல்ல நினைத்தார். எங்களுக்கு காட்சி முடிக்க வேண்டியிருந்தது. இதனால் சின்ன வாக்குவாதம் நடந்தது. பிறகு அது முடிந்துவிட்டது. தொடர்ந்து படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டார் ’ என்று தெரிவித்துள்ளார் அனில் ரவிபுடி.