சினிமா

நடிகர் விஜய்யுடன் `தளபதி 67’ படத்தில் நடிக்கிறேனா?- நடிகர் நரேன்!

காமதேனு

‘கைதி’ படத்தில் வாய்ப்பு வந்தது குறித்தும் நடிகர் கமல்ஹாசனுடன் ‘விக்ரம்’ படத்தில் நடித்த அனுபவம், ‘கைதி2’, `தளபதி 67’ ஆகியவை குறித்து நடிகர் நரேன் பேசியுள்ளார்.

‘கைதி’ படத்தில் நடிக்க லோகேஷ் தன்னைத் தேர்ந்தெடுத்தது, அதன் பிறகு கிடைத்த ‘விக்ரம்’ பட வாய்ப்பு, ’தளபதி 67’-ல் நடிப்பது பற்றி, ‘கைதி2’ எனப் பல விஷயங்கள் குறித்து நடிகர் நரேன் காமதேனு யூடியூப் தளத்திற்கென பிரத்யேகமாக கொடுத்துள்ள பேட்டியில் பேசியுள்ளார்.

அவர் பேசியிருப்பதாவது, ` `அஞ்சாதே’ படத்திற்குப் பிறகு எனக்கு வந்த பல கதைகள் போலீஸ் கதாபாத்திரமாகவே வந்தது. அவை அனைத்திலும் நான் நடிக்கவில்லை. லோகேஷ் கனகராஜ் என்னை ‘கைதி’ படத்தில் தேர்ந்தெடுத்ததே ‘அஞ்சாதே’ படம் பார்த்துதான். பிறகு ‘விக்ரம்’ படத்திற்காக அவர் என்னிடம் வந்ததும் அவரிடம் முதலில் நான் கேட்ட கேள்வி ‘எனக்கு கமல் சாருடன் சேர்ந்து நடிக்கும்படியான காட்சிகள் இருக்கிறதா?’ என்பதுதான்.

காமதேனு யூடியூப் தளத்திற்கு கொடுத்த பேட்டியில்

’விக்ரம்’ படம் பண்ணும்போதே ‘நமக்கு வெற்றித் தேவையில்லை. மிகப் பெரிய வெற்றிதான் வேண்டும்’ என்ற மனநிலையோடு லோகேஷ் இருந்தார். அதுவே அவர் மீதும் ‘விக்ரம்’ படம் மீதும் அதிக நம்பிக்கைக் கொடுத்தது. ’கைதி’யில் இருந்து பிஜோய் ‘விக்ரம்’ படத்திற்கு வந்ததே எனக்குத் தனிப்பட்ட முறையில் பிடித்திருந்தது” என்றவரிடம், லோகேஷ் அடுத்து நடிகர் விஜய்யுடன் இணையும் ‘தளபதி 67’ படத்தில் நடிக்கிறீர்களா என்று கேட்டேன்.

“’தளபதி 67’-ல் நான் இல்லை என்று நினைக்கிறேன். லோகேஷ் தன்னுடைய யுனிவர்ஸை எப்படி கட்டமைத்து இருக்கிறார் என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும். அவர் நான் உண்டு என்று சொன்னால் நிச்சயம் அதில் இருப்பேன். அப்படிதான் ‘கைதி2’ படமும்” என்றுத் தெரிவித்துள்ளார் நரேன்.

SCROLL FOR NEXT