சினிமா

இன்ஸ்டாவில் ஆபாசக் கருத்து: பிரபல நடிகை போலீஸில் புகார்

காமதேனு

இன்ஸ்டாகிராமில் தன்னைப் பற்றி ஆபாசமாகக் கருத்து பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி நடிகை ரம்யா புகார் அளித்துள் ளார்.

தமிழில், குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி உட்பட சில படங்களில் நடித்தவர் கன்னட நடிகை ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா. இவர், சினிமாவை விட்டுவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆனார். இப்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் ரம்யா, மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில், ’சார்லி-777’ திரைப்படம் குறித்து பாராட்டி கருத்து தெரிவித்திருந்தார். இதை பலர் வரவேற்றிருந்தனர். ஆனால், மர்மநபர் ஒருவர் ரம்யா பற்றி ஆபாசமாகக் கருத்து பதிவு செய்திருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரம்யா, பெங்களூரு அல்சூர்கேட் சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் நேரில் சென்று புகார் அளித்தார்.

அதில், தன்னைப் பற்றி ஆபாசமாக பதிவிட்ட மர்மநபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT