சினிமா

நடிகை ஹன்சிகாவுக்கு டிசம்பரில் திருமணம்: ஜெய்ப்பூர் அரண்மனையில் ஏற்பாடுகள் தீவிரம்

காமதேனு

நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு டிசம்பர் மாதம் திருமணம் உறுதி செய்யப்பட்ட நிலையில், அதற்காக ஜெய்ப்பூர் அரண்மனை புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்தியில் சின்னத்திரை மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் ‘தேஸ் மெய்ன் நிக்லா ஹோகா சானத்’ என்ற தொடரில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதைப் பெற்றுள்ளார்.

கடந்த 2007-ம் ஆண்டு புரி ஜெகநாத் இயக்கிய ‘தேசமுதுரு’ தெலுங்கு படத்தின் மூலம் ஹன்சிகா திரையுலகில் கால் பதித்தார். அதனைத் தொடர்ந்து ‘ஆப் கா சரூர்’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹன்சிகா அறிமுகமானார். 2008-்ம் ஆண்டு ‘பிந்தாஸ்’ என்ற கன்னடப் படத்தில் நடிகர் புனித் ராஜ்குமாருடன் இணைந்து நடித்தார்.

கடந்த 2011-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘வேலாயுதம்’ படத்தில் அறிமுகமான ஹன்சிகா, ‘மாப்பிள்ளை’, ‘எங்கேயும் காதல்’, ’ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘சேட்டை', 'வாலு', 'ரோமியோ ஜூலியட்', ' அரண்மனை', 'மனிதன்', 'போகன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் இவர் நடித்த ஐம்பதாவது படமான ‘மஹா’ வெளியானது. மேலும் தற்போது அவர் நான்கு தமிழ் படங்களிலும், 2 தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஹன்சிகாவிற்கும், தொழிலதிபர் ஒருவருக்கும் டிசம்பர் மாதம் திருமணம் நடக்கவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த திருமணம் புகழ்பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெற உள்ளது. இதையொட்டி பழமையான ஜெய்ப்பூர் கோட்டை மற்றும் அரண்மனை புதுப்பிக்கப்பட்டு, தயாராகி வருகிறது. ஆடம்பர முறையில் அதிக பொருட்செலவில் இந்த திருமணம் நடைபெற உள்ளது. டிசம்பர் மாதம் திருமணம் என்பது உறுதி செய்யப்பட்டாலும், எந்த நாளில் நடைபெறும் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT