சினிமா

’என் மகன் மீது பொய்யான பாலியல் புகார்’ - பிரபல நடிகரின் தாய் மனு

காமதேனு

மலையாள இளம் நடிகை ஒருவர், கொச்சி போலீஸில் நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். இதுபற்றி போலீஸார் விசாரிக்கத் தொடங்கியதும், விஜய் பாபு வெளிநாட்டுக்குத் தப்பியோடினார். கடந்த 2-ம் தேதி, விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று போலீஸார் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

மே 19-ம் தேதி வரை கால அவகாசம் வேண்டும் என்று விஜய் பாபு மின்னஞ்சலில் பதிலளித்தார். இந்நிலையில் மற்றொரு பெண்ணும் சமூக வலைதளத்தில் அவர் மீது பாலியல் புகார் கூறினார். இதையடுத்து இவ்விவகாரம் மேலும் பரபரப்பானது. சர்வதேச போலீஸ் உதவியுடன் அவரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், தன் மகன் மீது பொய்யான பாலியல் வன்கொடுமை புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் இதற்கு பின்னால் திரைத் துறையைச் சேர்ந்த ஒரு குழுவினர் இருப்பதாகவும் நடிகர் விஜய் பாபுவின் தாய் மாயா பாபு, முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் டிஜிபிக்கும் மனு அளித்துள்ளார். தன் மகனின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்பதற்காக சதி வேலையில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே திரைப்படங்கள் தயாரிப்பதற்காக விஜய் பாபு பெற்ற வெளிநாட்டு நிதி பரிவர்த்தனைகள் குறித்து பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் தனியாக விசாரிக்க உள்ளனர்.

SCROLL FOR NEXT