நடிகர் திலீப்
நடிகர் திலீப் 
சினிமா

நடிகை கடத்தல் வழக்கு: சாட்சிகளை மீண்டும் விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி

காமதேனு

நடிகை கடத்தல் வழக்கில் 8 சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்த, கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பிரபல நடிகை, கடந்த 2017-ம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் மலையாள நடிகர் திலீப், பல்சர் சுனில் உட்பட சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் திலீப் ஜாமீனில் வெளியே வந்தார்.

நடிகை பலாத்காரம் செய்யப்பட்டபோது செல்போனில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள், நடிகர் திலீப்பிடம் கொடுக்கப்பட்டதாகவும் அதை அவர் அதிக சத்தத்துடன் பார்த்தது தனக்குத் தெரியும் என்றும் திலீப்பின் நண்பரும் இயக்குநருமான பாலச்சந்திர குமார் சமீபத்தில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி பைஜு பவுலோசை கொல்ல, நடிகர் திலீப், அவர் தம்பி அனூப் உட்பட 6 பேர் சதி திட்டம் தீட்டியதாகவும் பாலச்சந்திரகுமார் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் மீது, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, இந்த வழக்கில் 12 சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்று அரசு தரப்பு, நீதிமன்றத்தை நாடியது. இதற்கு நடிகர் திலீப் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. வழக்கு விசாரணையை இழுத்தடிக்க அரசு தரப்பு முயல்வதாகவும் சாட்சிகளை மீண்டும் விசாரிக்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் கேரள உயர் நீதிமன்றத்தில் திலீப் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம் அரசு தரப்பு கோரியிருந்தபடி, 12 சாட்சிகளில் 8 சாட்சிகளிடம் மறுபடியும் விசாரிக்க அனுமதி அளித்தது. இந்த விசாரணையை 10 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதோடு, திலீப்பின் மொபைல் அழைப்புகளை பரிசோதிக்கவும் அனுமதி அளித்துள்ளது.

இதற்கிடையே, போலீஸாரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில், திலீப்பின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை வர இருக்கிறது.

SCROLL FOR NEXT