தயாரிப்பாளர் சிங்காரவேலன் நண்பர்களுடன் சேர்ந்து போலி ஆவணங்கள் தயார் செய்து என்னையும், தன்னை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களையும் பணம் கேட்டு மிரட்டுவதாக நடிகர் விமல் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
நடிகர் விமல் 5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தயாரிப்பாளர் கோபி நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதில் `மன்னர் வகையறா' படத்திற்காக பணம் வாங்கிக் கொண்டு பணத்தை திருப்பித் தராமல் மோசடி செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் இன்று காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த நடிகர் விமல், தயாரிப்பாளர் கோபி அளித்த புகார் தொடர்பாக விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். மேலும் தனது பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து, பணம் கேட்டு மிரட்டல் விடுக்கும் தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீது புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விமல், தயாரிப்பாளர் சிங்காரவேலன் என்பவர் எனது பெயரில் A3V என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி `மன்னர் வகையறா' படத்திற்காக பணத்தை கடனாக பெற்றுதுடன், படம் விற்பனை செய்து அதன்மூலம் வந்த பணத்தை முறையாக கணக்கு காட்டாமல் சிங்காரவேலன் மற்றும் அவரது நண்பர்கள் மோசடி செய்ததாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் உரிய ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில் சிங்காரவேலன், கோபி மற்றும் அவரது நண்பர்கள் தன்னிடம் எந்தவித பண பரிவர்த்தனையும் வைத்துக் கொள்ளவில்லை என்பதற்கான ஆவணங்களையும் காவல் துறையினரிடம் கொடுத்துள்ளதாக கூறினார்.
`மன்னர் வகையறா' பட விவகாரத்திற்கு பிறகு, கடந்த நான்கு வருடமாக சிங்காரவேலன், கோபி மற்றும் அவரது நண்பர்கள், போலியான ஆவணங்களை வைத்து, தன்னை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் அணுகி அவர்களை மிரட்டியதாக நடிகர் விமல் குற்றம் சாட்டினார். என்னை நிம்மதியாக தூங்கவிடாமல் தயாரிப்பாளர் சிங்காரவேலன் மிரட்டி வந்ததாக தெரிவித்த விமல், தனது பெயர் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக சிங்காரவேலன் மிரட்டலுக்கு பயந்து லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து இழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "தன்னிடம் கதை சொல்ல வரும் நபர்களிடம் சிங்காரவேலன் லட்சக்கணக்கில் என் பெயரை சொல்லி பணம் வாங்கி மோசடி செய்துள்ளார். குறிப்பாக, கதை சொல்ல வந்த பெங்களூருவை சேர்ந்த ஒருவரை ஏமாற்றி சிங்காரவேலன் ஐந்து லட்ச ரூபாய் பெற்று கொண்டுள்ளார். இதனை கேள்விப்பட்டு அந்தப் பணத்தைதான் திருப்பி கொடுத்தேன். என் மீது எந்தவித குற்றமும் இல்லாத நிலையில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளலாம் என எண்ணி தற்போது காவல்துறையை நாடி உள்ளேன்.
தன்னுடைய ஆவணங்களையும் கையெழுத்துகளையும் வைத்து A3v தயாரிப்பு நிறுவனம் உருவாக்கப்பட்டது மட்டுமே எனக்குத் தெரியும். மற்றபடி தயாரிப்பாளர் சிங்காரவேலன் மற்றும் அவரது நண்பர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் தனக்கு ஒன்றும் தெரியாது. சமீபத்தில் நான் நடித்து வெளியான "விலங்கு" வெப்சீரிஸ் தயாரிப்பாளர் மதனிடம் போலி ஆவணங்களை காண்பித்து சிங்காரவேலன் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இரு தரப்பு புகாரைப் பெற்றுக்கொண்டு யார் மோசடி செய்தது என்பதை போலீஸார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று கூறினார்.