சினிமா

நடிகர் விக்ரம் உடல் நிலை: மானேஜர் விளக்கம்

காமதேனு

நடிகர் விக்ரமின் உடல் நிலை குறித்து அவரது மானேஜர் சூரியநாராயணன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ள இவர், இப்போது மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன், கோப்ரா படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்நிலையில் நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இது தமிழ்த்திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி விசாரித்தபோது, ’நடிகர் விக்ரமுக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆஞ்சியோகிராபி சிகிச்சை செய்தனர். இப்போது அவர் நலமாக உள்ளார்’ என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில் விக்ரம் மானேஜர் சூரியநாராயணன் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ’’நடிகர் சீயான் விக்ரமுக்கு நெஞ்சில் அவுசரியம் ஏற்பட்டதை அடுத்து அவர் சிகிச்சைப் பெற்றுக்கொண்டார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக வெளியானத் தகவலில் உண்மை இல்லை. இதுதொடர்பான வதந்திகள் வேதனையை தருகின்றன. இப்போது விக்ரம் நலமாக இருக்கிறார். இன்னும் ஓரிரு நாளில் வீடு திரும்புவார். அவரைப் பற்றி வரும் வதந்திகளுக்கு இந்த தகவல் முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT