சினிமா

'ஜெய்பீம்' படம் குறித்து நடிகர் சூர்யா நெகிழ்ச்சி ட்விட்!

காமதேனு

‘ஜெய்பீம்’ திரைப்படம் வெளியாகி ஒரு வருடமானதையொட்டி நடிகர் சூர்யா நெகிழ்ச்சியான ட்விட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

கடந்த வருடம் தீபாவளி பண்டிகை விடுமுறையை ஒட்டி ‘ஜெய்பீம்’ திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. ஞானவேல் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, லிஜோ மோல், மணிகண்டன் உள்ளிட்டப் பலர் நடித்திருந்தனர். சூயாவின் 2டி நிறுவனம் படத்தைத் தயாரித்து இருந்தது. ஆஸ்கர் விருது பட்டியல் வரை இந்தத் திரைப்படம் போட்டிக்குச் சென்றது.

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை அதிகாரத்தில் உள்ளவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதுதான் படத்தின் ஒருவரி. உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம் வரவேற்பைப் பெற்ற அதே அளவுக்கு பல விமர்சனங்களையும் எதிர்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றோடு படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது.

இதனை ஒட்டி நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘’ஜெய்பீம்’ படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது மகிழ்ச்சியான விஷயம். இது ஸ்கிரிப்ட்டாக இருந்து படமாக மாறி இன்று வரை மேலும் மேலும் வலிமையானதாக மாறி வருகிறது. இப்படி ஒரு அர்த்தமுள்ள படத்தைக் கொடுத்ததற்காக என்னுடைய சகோதரர் ஞானவேல் மற்றும் அணிக்கு என்னுடைய நன்றி. என்னுடைய சினிமா பயணத்தில் வழக்கறிஞர் சந்திரு கதாபாத்திரம் மிக முக்கிய மைல்கல்’ என நெகிழ்ச்சியாக ட்விட் செய்துள்ளார்.

மேலும், இயக்குநர் ஞானவேல் மற்றும் சூர்யா இருவரும் இரண்டாவது முறையாக இணையக்கூடியத் திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் தொடங்க இருப்பதாக இயக்குநர் ஞானவேல் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT