சினிமா

காட்டுத் தீ: வனத் துறையுடன் இணைந்து நிற்க கார்த்தி கோரிக்கை

காமதேனு

காட்டுத் தீக்கு எதிரான போரில் வனத் துறையுடன் இணைந்து நிற்போம் என்று நடிகர் கார்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

வறண்ட வானிலை காரணமாக, கொடைக்கானல் வனப் பகுதியில் காட்டுத்தீ பரவியுள்ளது. இதனால் அரிய வகை மரங்கள் மற்றும் வனவிலங்குகள் கருகியுள்ளன. வனத் துறையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்நிலையில் ’சர்தார்’ படப்பிடிப்புக்காக மைசூர் சென்றுள்ள நடிகர் கார்த்தி, இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அங்கிருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“கோடை வெயிலுக்கு இதமளிக்கின்ற, இயற்கை தந்த வரம் கொடைக்கானல். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் இது கனவுப் பிரதேசம். எத்தனையோ வனவிலங்குகள், பறவைகள், தாவரங்கள் இங்கே உள்ளன. ஒரு எச்சரிக்கை - இது நெருப்புக்காக! எளிதில் பற்றிக்கொள்ளும் நிலையில் உள்ளது காடு. ஒரு சிறு தீப்பொறி பட்டால் போதும். மரங்களும் பறவைகளும் அழிந்துபோகிற அபாயம் இருக்கிறது. அதனால் நாம் எல்லோரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். காட்டுத் தீக்கு எதிரான இந்தப் போரில் வனத் துறையுடன் இணைந்து நிற்போம். நன்றி!”

இவ்வாறு நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT