நடிகை கடத்தல் வழக்கில், நடிகர் திலீப்பின் செல்போன்கள் உட்பட 6 செல்போன்கள் நீதிமன்ற பதிவாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
நடிகை கடத்தல் விவகாரத்தில், விசாரணை அதிகாரியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில், நடிகர் திலீப் மற்றும் அவர் உறவினர்கள் உட்பட 6 பேரிடம் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் அவசர மனுவை கேரள உயர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த குற்றப்பிரிவு போலீஸார், விசாரணைக்கு நடிகர் திலீப் ஒத்துழைக்கவில்லை என்றும் செல்போன்களை தர அவர் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், திங்கட்கிழமை காலை 10.15 மணிக்குள் உயர் நீதிமன்ற பதிவாளரிடம் நடிகர் திலீப்பின் செல்போன்கள் உட்பட 6 செல்போன்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று காலை கேரள உயர் நீதிமன்ற பதிவாளரிடம், நடிகர் திலீப்பின் 3 செல்போன்கள், அவர் சகோதரர் அனூப்பின் 2 செல்போன்கள், சகோதரி கணவர் சுராஜின் ஒரு போன் ஆகிய 6 செல்போன்கள் சீலிடப்பட்ட உறையில் வைத்து சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், நடிகர் திலீப்பின் முன்ஜாமீன் மனு மற்றும் அரசின் மேல்முறையீடு ஆகியவை இன்று பரிசீலிக்கப்பட இருக்கின்றன.