சின்னக் கலைவாணர் என அழைக்கப்படும் நடிகர் விவேக், கடந்த வருடம் ஏப்ரல் 17 -ம் தேதி திடீரென மரணமடைந்தார். அவர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்ததாகக் கூறப்பட்டது. குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் கூறியதை அடுத்து, கடந்த 2010-ம் ஆண்டு முதல் ‘கிரீன் கலாம் ’அமைப்பின் மூலம் மரக்கன்றுகளை நடிகர் விவேக் நட்டு வந்தார்.
ஒரு கோடி மரக்கன்றுகள் நடவேண்டும் என்பது அவர் திட்டம். விவேக்கின் அந்தத் திட்டத்தை, அவர் மறைவுக்கு பின் அவரது நண்பரும் நடிகருமான செல் முருகன் தொடர முடிவு செய்துள்ளார்.
அதன்படி மறைந்த விவேக்கின் முதலாமாண்டு நினைவு தினத்தை ஒட்டி, இன்று காலை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மரக்கன்று நட்டு அந்தத் திட்டத்தை செல்முருகன் தொடங்கினார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவர் பூச்சி எஸ் முருகன் இதற்குத் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு எஸ்.பி. அரவிந்தன் ஐபிஎஸ்., நடிகர்கள் பாபி சிம்ஹா, உதயா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.