’ஆதார்’ பட இயக்குநரைப் பாராட்டி காரைப் பரிசாக வழங்கும் தயாரிப்பாளர் திருமதி சசிகுமார்
’ஆதார்’ பட இயக்குநரைப் பாராட்டி காரைப் பரிசாக வழங்கும் தயாரிப்பாளர் திருமதி சசிகுமார் 
சினிமா

‘எந்தப் படத்துக்கும் இவ்வளவு துல்லியமாக விமர்சனம் வந்ததில்லை’ - அசந்துபோன ‘ஆதார்’ இயக்குநர்

காமதேனு

நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த ‘ஆதார்’ திரைப்படம், சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. இந்தப் படத்துக்கு ஊடகங்களில் வெளியான விமர்சனங்களால் ஊக்கமடைந்திருக்கும் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார், விமர்சனங்களைத் தொகுத்து ஆல்பமாக வெளியிடத் திட்டமிடுவதாகக் கூறியிருக்கிறார்.

‘ஆதார்’ திரைப்படத்தின் வெற்றிக்கு வித்திட்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர்கள் கருணாஸ், திலீபன், நடிகை இனியா, படத்தொகுப்பாளர் ராமர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் பேசுகையில், “பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் ‘ஆதார்’ படத்தை பற்றி வெளியான அனைத்து விமர்சனங்களையும் வாசித்தேன். இதன் காரணமாக எழுந்த உந்துதலால் நன்றி அறிவிக்கும் நிகழ்வை ஒருங்கிணைத்தேன். திரைக்கதை எழுதும் போது எத்தகைய உணர்வுடன் எழுதினேனோ... அது துல்லியமாக விமர்சனத்தில் இடம்பெற்றிருந்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. படைப்பாளிகளான நாங்கள் சில ஆண்டுகள் உழைத்து திரைக்கதை எழுதி, அதனை படைப்பாக வெளியிடுகிறோம். அதனை இரண்டு மணி நேரம் மட்டுமே பார்த்துவிட்டு, எப்படி இவ்வளவு துல்லியமாக விமர்சிக்க முடிகிறது என்ற ஆச்சரியம் என்னுள் இன்னும் இருக்கிறது.

பத்திரிக்கையாளர்களான திரை விமர்சகர்கள் தினந்தோறும் ஒன்று அல்லது இரண்டு அல்லது நான்கு திரைப்படங்களைக் கூட பார்க்கிறீர்கள். அந்த நெருக்கடியான காலகட்டத்திலும், ‘ஆதார்’ போன்ற திரைப்படத்தின் உள்ளடக்கத்தை உட் கிரகித்து, அதனை நேர்மறையாகவும், விரிவாகவும், விவரிக்க முடிகிறது என்றால்.., உங்களுடைய எழுத்தை கண்டு எனக்குள் மிரட்சி ஏற்பட்டது” என்றார்.

மேலும், “ஏனைய திரைப்படங்களின் விமர்சனத்தைப் போல் அல்லாமல், ‘ஆதார்’ திரைப்படத்திற்கான விமர்சனங்கள் நன்றாக இருந்தன. அவற்றைத் தொகுத்து ஆல்பமாக வெளியிடலாம் என்ற எண்ணமும் ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் ‘ஆதார்’ திரைப்படத்தின் விமர்சனத்தில் இருக்கும் துல்லியமான விவரங்கள் இதற்கு முன் எந்தத் திரைப்படத்தின் விமர்சனத்திலும் இடம்பெறவில்லை. என்னுடைய இயக்கத்தில் வெளியான ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களுக்கும் இது போன்ற விமர்சனங்கள் வந்ததில்லை. இது தொடர்பாக தயாரிப்பாளரிடமும் ஆலோசித்துக் கொண்டிருக்கிறேன்” என்று அவர் கூறினார்.

இதனிடையே ‘ஆதார்’ படத்தின் வெற்றியைப் பாராட்டி, இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாருக்கு, தயாரிப்பாளர் திருமதி சசிகுமார் கார் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT