சினிமா

1.50 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறை: நடிகர் விஜய் வழக்கில் தடை நீட்டிப்பு!

காமதேனு

நடிகர் விஜய்க்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

கடந்த 2016-17 நிதியாண்டிற்கான வருமானவரி கணக்கை நடிகை விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தது. அதன்படி, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை எனக் கண்டறிந்தது. இதையடுத்து, வருமானத்தை மறைத்ததற்கான 1.50 கோடி அபராதம் விதித்து கடந்த ஜூன் 30-ம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், "அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால், 2019-ம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். எனவே காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், நடிகர் விஜய்க்கு 1.50 கோடி அபராதம் விதித்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததோடு, வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 16-ம் தேதிக்கு (இன்று) தள்ளிவைத்தார்.

அதன்படி இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் விஜய்க்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை அக்டோபர் 26-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT