தனியாராகிறதா அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை?

கொந்தளிக்கும் கரும்பு விவசாயிகள்
ஆலை திறக்கக்கோரி நடைபெற்ற  போராட்டம். (பைல் படம்)
ஆலை திறக்கக்கோரி நடைபெற்ற போராட்டம். (பைல் படம்)

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. மதுரை மட்டுமின்றி திண்டுக்கல், விருதுநகர் பகுதி கரும்பு விவசாயிகள் பதிவு செய்த கரும்பு இந்த ஆலையில் அரைக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக வறட்சி, மழையின்மை காரணமாக ஒரு வருடம் 1200 ஏக்கர் கரும்பும், அதற்கு அடுத்த வருடம் 900 ஏக்கர் கரும்பும் பதிவு செய்யப்பட்டது. இந்த ஆலைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து பதிவு செய்யப்படாத கரும்பு 20 ஆயிரம் தான் கிடைக்கும். ஆனால், இந்த ஆண்டு 2 ஆயிரம் ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டது. அதாவது, 60 ஆயிரம் டன் கரும்பு பதிவு செய்யப்பட்டது. குறைந்த அளவு கரும்பு வைத்து இயக்கினால் நஷ்டம் ஏற்படும் என கூறப்பட்டு ஆலை தொடர்ந்து இயக்கப்படவில்லை.

இதனைக் கண்டித்து 2021-22- ஆம் ஆண்டுக்கான அரவையை தொடங்க வலியுறுத்தியும் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கிட்டத்தட்ட 46 நாட்கள் போராட்டம் நடைபெற்றது. கரும்பு ஆலை முன்பு காத்திருப்பது, பொங்கலிடுவது என வித்தியாசமான தொடர் போராட்டத்தை விவசாயிகள் நடத்தினர்.

இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் வந்தது. இதனால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தேர்தல் நடந்து முடிந்த பின் ஆலை திறக்கப்படும் என விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால், திறக்கப்படவில்லை.

இதுகுறித்து அப்பகுதி கரும்பு விவசாயிகள் கூறுகையில், ``எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மதுரை மக்களுக்கு வாழ்வளிக்கும் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்கப்பட வேண்டும் என்று பேசினார். அத்துடன் திமுக தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை திறக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், இதுவரை திறக்கப்படவில்லை'' என்றார்.

ஆனால், சிலரோ வேறு மாதிரி கூறுகிறார்கள். ``இந்த ஆலை மற்றும் இதனைச் சார்ந்த பள்ளி, மைதானம், மருத்துவமனை ஆகியவற்றைச் சேர்த்தால் 137 ஏக்கர் வரும். சர்க்கரை ஆலை நஷ்டத்தில் இயங்குவதை காரணம் காட்டி தனியாரிடம் ஒப்படைத்து விட்டால் கட்டிங் கிடைக்கும் என சில ஆளுங்கட்சியினர் நினைக்கின்றனர்'' என்று குண்டைப்போடுகின்றனர்.

அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை முன்பு தொடர் போராட்டம் நடத்திய தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் என்.பழனிச்சாமியிடம் இது குறித்து கேட்டதற்கு, ``அலங்காநல்லூர் ஆலையை இயக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம். தேர்தலுக்காக தான் போராட்டத்தை கைவிட்டோம். ஆலை திறக்கப்படாவிட்டால் மீண்டும் போராட்டத்தை நடத்துவோம்' என்று உறுதிபடக் கூறினார்.

தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையில் சொன்னபோல, ஆலையை இயக்க வேண்டும் என நம்புகிறார்கள். செய்வாரா ஸ்டாலின்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in