கவிஞனும் கப்பலோட்டிய தமிழனும்

கவிஞனும் கப்பலோட்டிய தமிழனும்

இன்று (டிச.11) பாரதியாரின் பிறந்தநாள். பாரதியின் நினைவு நூற்றாண்டு மட்டுமல்லாமல் அவருடைய நண்பரான வ.உ.சிதம்பரனாரின் 150-ம் பிறந்தநாளையும் கொண்டாடும் இந்த ஆண்டில் அந்த இருவரின் வாழ்வும் எப்படி இணைந்தும் பிரிந்தும் இருந்தன என்பதை இந்தக் கட்டுரை அலசுகிறது.

வ.உ. சிதம்பரம் பிள்ளை, தான் பிறந்த ஒட்டப்பிடாரம் 'அருந்திறன் நாட்டி ஆக்கிலரோடு அமர் பொருந்திய கட்டபொம்மு நாயகன் … பண்புடன் அமர்ந்த’ பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் அமைந்திருந்தது குறித்து பெருமிதம் கொண்டிருந்தார். கட்டபொம்மனுக்கு துரோகம் இழைத்ததற்காக அவப்பெயர் பெற்ற எட்டயபுரம் ஜமீனில் பிறந்தவர் பாரதி. இரண்டு ஊர்களுக்கும் இடைப்பட்ட தொலவு 30 கிலோமீட்டர்கூட இருக்காது. வ.உ.சி-யும் பாரதியும் குடும்ப நண்பர்களும்கூட. என்றாலும் அவர்கள் தம் சொந்த ஊர்களில் சந்தித்துக்கொண்டதே இல்லை.

மாறாக அவர்களின் முதல் சந்திப்பு சென்னையில் நிகழ்ந்தது. 1906-ன் பிற்பகுதியில் தம் நண்பர் ஒருவரைச் சுங்குராம தெருவில் சந்தித்துவிட்டு பிராட்வே சாலையைக் கடந்து நடந்து சென்றுகொண்டிருந்தபோது, பாரதி ஆசிரியராகப் பணிபுரிந்த ‘இந்தியா’ வார இதழின் அலுவலகத்தைக் கண்டார். உள்ளே நுழைந்து மகாகவியைச் சந்தித்தபோது பரஸ்பர மரியாதை மட்டுமல்லாமல் கூர்மையான சில கருத்து மாறுபாடுகளும் நிறைந்த ஒரு நட்பு தொடங்கியது. அப்போது 34 வயதினரான வ.உ.சி., பாரதியைவிட10 வயது மூத்தவர் என்றாலும் மகாகவியின் மகத்துவத்தை அங்கீகரிக்க இந்த வயது வேறுபாடு தடையாக இருக்கவில்லை. 'என் உள்ளத்தில் மின்மினிப் பூச்சி போல் ஒளிர்ந்துகொண்டிருந்த தேசாபிமான நெருப்பு விளக்குப் போல் ஒளிவிட்டுப் பிரகாசித்தது’ என்ற பின்னாளில் இந்தச் சந்திப்பைப் பற்றி பெருந்தன்மையுடன் பதிவுசெய்தார் வ.உ.சி.

அவர்கள் இருவரும் முதல்முறையாகச் சந்தித்ததற்கு அடுத்த சில ஆண்டுகளில் நிகழவிருந்ததை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அசாதாரணமான அந்தக் காலகட்டத்தில் சுதந்திரப் போராட்டத்துக்கான வெகுமக்கள் திரட்சியின் முதல் கட்டமான சுதேசி இயக்கம் அதன் உச்சத்தை அடைந்திருந்தது. வ.உ.சி விரைவில் தன்னுடைய பிரமிப்பூட்டக்கூடிய கப்பல் நிறுவனம் வழியே தனது சுதேசியப் பொருளாதாரப் போராட்டத்தைத் தொடங்கினார். கப்பல் நிறுவனத்துக்கு முதலீடு திரட்டுவதற்காக வ.உ.சி தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். தமிழகமெங்கும் கடுமையான பயணங்களில் அடுத்த ஆண்டு கழிந்தது. வ.உ.சி-யோடு பாரதியும் பல மேடைகளில் பங்கேற்று உரையாற்றினர். வ.உ.சி-யின் தொழில்முயற்சி குறித்து தான் நடத்திவந்த இதழ்களில் மிக விரிவாகவும் பேரார்வத்துடனும் தொடர்ந்து எழுதிவந்தார். நடைமுறை சாத்தியமற்றதென்றாலும் லட்சியவாதம் சார்ந்த பல அறிவுரைகளையும் பாரதி என்ற கவிஞர் வழங்கிவந்தார்.

1907-ல் சூரத்தில் நடந்த கொந்தளிப்பு மிகுந்த காங்கிரஸ் மாநாட்டுக்கு ஒன்றாகப் பயணித்து, லோகமான்ய திலகருடைய அணியின் சார்பாகச் செயல்பட்டதில் இருவருக்கிடையிலான பிணைப்பு மேலும் வலுப்பட்டது. திலகர், அரவிந்தர் உள்ளிட்ட தலைவர்களை முதன்முறையாகச் சந்தித்துவிட்டு பாரதியும் வ.உ.சி-யும் இரட்டிப்பு உத்வேகத்துடன் திரும்பினர்.

சூரத் பிளவுக்கு அடுத்த மூன்று மாதங்களில் சுதேசி இயக்கம் உச்சத்தை அடைந்தது. சுதேசிக் கப்பல்களைச் செலுத்தியது நீராவியா தேசப்பற்றுப் பிரச்சாரமா எனத் திகைக்கும் அளவுக்கு வ.உ.சி-யின் செயல் வேகம் இருந்தது. வ.உ.சியுடன் சுப்பிரமணிய சிவா இணைந்த பிறகு இந்த நிலை மேலும் தீவிரமடைந்தது. தமிழ் மேடைப் பேச்சின் வரலாற்றாசிரியர் பெர்னார்ட் பேட் ‘பேச்சின் பிழம்பு’ (‘Oratorical incandescence’) குறிப்பட்டது போல் இருவரின் பேச்சாற்றலும் ஒளிர்ந்தது. வ.உ.சி-யும் சிவாவும் அரசியல் தொடர்பாடலுக்கான ஊடகமாகத் தமிழை வலுப்படுத்தினர். தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் அன்றாடம் நிகழ்ந்த பொதுக்கூட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். வ.உ.சி தொடங்கிய சுதேசி கப்பல் கம்பெனியின் போட்டி பிரிட்டிஷ் நீராவி கப்பல் நிறுவனத்துக்குக் கடுமையான அறைகூவலை விடுத்தது. இதையடுத்து வ.உ.சி இன்னொரு போராட்ட வடிவத்தைக் கையிலெடுத்தார். பிரிட்டிஷாருக்குச் சொந்தமான கோரல் ஆலையில் தொழிலாளர் போராட்டத்துக்குத் தலைமை வகித்து அனைத்து கோரிக்கைகளையும் வென்றெடுத்தார்.

அப்போது பிரிட்டிஷார் காரியத்தில் இறங்கினர். நெல்லை மாவட்ட ஆட்சியர் எல்.எம். விஞ்ச், அழைத்து மிரட்டியபோதும் வ.உ.சி பின்வாங்க மறுத்தார். நாடகீயத் தருணங்கள் மிக்க இந்த உரையாடலை, பாரதி உணர்ச்சிப் பெருக்கான கவிதைகளில் பிரமாதமாகப் பதிவுசெய்திருக்கிறார் ( ‘கலெக்டர் விஞ்ச் ஸ்ரீ சிதம்பரம் பிள்ளைக்குச் சொல்லுதல்’, ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை சொல்லிய மறுமொழி).

நாட்டி லெங்கும் சுதந்திர வாஞ்சையை
நாட்டினாய்—கனல்—மூட்டினாய்,
வாட்டி யுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே
மாட்டுவேன்—வலி—காட்டுவேன்.

என்ற விஞ்சின் ஆணவமான மிரட்டலுக்கு,

சதையைத் துண்டுதுண் டாக்கினும் உன்னெண்ணம்
சாயுமோ? - ஜீவன் ஓயுமோ?
இதயத் துள்ளே இலங்கு மஹாபக்தி
ஏகுமோ? - நெஞ்சம் வேகுமோ?

என்று வ.உ.சி துணிவுடன் பதிலுரைத்தார்.

12 மார்ச் 1908 அன்று வ.உ.சி-யும் சிவாவும் கைதுசெய்யப்பட்டனர். அடுத்த நாள் திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் வன்முறை வெடித்தது. அரசு சொத்துகளை மக்கள் தீக்கிரையாக்கினர். பின்னாளில் இது ‘திருநெல்வேலிக் கலகம்’ என்று அழைக்கப்படலானது.

வ.உ.சி மீது தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டது. திருநெல்வேலிக்குப் பயணித்த பாரதி வ.உ.சி-யைச் சிறையில் சந்தித்த பிறகு அச்சந்திப்பைப் பற்றி எழுதிய பதிவுக்குத் தமிழ் இதழியல் வரலாற்றில் என்றும் தனியிடம் உண்டு. அரசாளச் சொன்னாலும் காட்டுக்குச் செல்ல என்றாலும் மலர்ந்த செந்தாமரையைப் போன்ற ராமனின் முகம் இருந்ததாகச் சொன்ன கம்ப ராமாயண வரியை வ.உ.சி-க்குப் பொருத்திக்காட்டினார். வ.உ.சி மீதான தேசத்துரோக வழக்கின் முடிவு என்னவாக இருக்கும் என்று அனைவருக்கும் தெரிந்திருந்தது என்றாலும் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை யாராலும் நம்ப முடியவில்லை. ஒரு ஆயுள் மட்டுமே உள்ள மனிதனுக்கு இரட்டை ஆயுள் தண்டன என்பது எவரும் அறியாதது.

வ.உ.சி-க்கு விதித்த கொடூரமான தண்டனை சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அளிக்கப்பட்ட அச்சுறுத்தல். அதை உணர்ந்த பாரதி பிரெஞ்சு ஆட்சிக்கு உட்பட்டிருந்த புதுச்சேரியில் அடைக்கலம் புகுந்தார். ஆனாலும் வ.உ.சி-யின் அரசியல் திட்டங்களுக்கான பாரதியின் பிரச்சாரம் விடாமல் தொடர்ந்தது. வ.உ.சிக்கு ஆதரவாக வழக்காடுவதற்கு ஒன்றும், மூழ்கிவிடும் நிலையில் இருந்த அவருடைய கப்பல் நிறுவனத்தை மீட்பற்கு மற்றொன்றுமாக பாரதி இரண்டு நிதிகளைத் திரட்டினார்.

சிறையில் வ.உ.சியின் துன்பங்கள் தொடர்ந்தன. பழிவாங்கும் எண்ணம்கொண்ட அரசு செக்கிழுக்க வைத்தது. ‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம்…’ என்ற காலத்தால் அழியாத கவிதையை எழுத இதுவே வித்து. அசலான தேசப்பற்றாளர்களுக்கு வ.உ.சி அடைக்கப்பட்டிருந்த கோவைச் சிறைதான் தேசியவாதப் புனிதத் தலம் என்றும் பாரதி குறிப்பிடுகிறார்.

மேல்முறையீட்டில் வ.உ.சிக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறைக்கப்பட்டு அவர் டிசம்பர் 1912-ல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் 18 மாதங்களுக்குப் பிறகே தன்னுடைய நண்பரைச் சந்திக்க அவர் புதுச்சேரிக்குச் செல்ல வாய்த்தது. அது ஒரு உணர்வுபூர்வமான மறுகூடலாக இருந்திருக்கும் என்பதில் ஐயமிருக்க முடியாது. பாரதியின் வீட்டில் வ.உ.சி தங்கியிருந்த மூன்று நாளும் அவர்கள் இருவரும் “வாசிப்பிலும் எழுத்திலும் ஆழ்ந்திருந்தனர்” என்று காவல் துறை அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.

காலனிய எதிர்ப்பு மட்டுமே அந்தக் காலகட்டத்தின் அரசியலாக இருக்கவில்லை. பிற சிந்தாந்த மோதல்களும் நிகழ்ந்துவந்தன. மொழியிலும் சாதியிலும் மையம்கொண்டிருந்த அடையாள அரசியல் பற்றியெரியும் பிரச்சினையாக இருந்துவந்தது. 1915-ன் இடைப்பகுதியில் வ.உ.சி-யும் பாரதியும் அவர்களின் பொது நண்பர் சிவா நடத்திவந்த ’ஞானபானு’ இதழில் ஒரு காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். தமிழ் நெடுங்கணக்கில் வர்க்க எழுத்துக்கள் இல்லாததைச் சுட்டிக்காட்டி அயல்மொழிச் சொற்களைச் சரியாக உச்சரிப்பதற்கு ஏற்றவகையில் தமிழ் எழுத்துவடிவத்தில் சீர்த்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று பாரதி பரிந்துரைத்தார்.

நல்ல நோக்கம் கொண்டது என்றாலும், பாரதியின் இந்த முன்மொழிவின் தொனியும் தமிழ் எழுத்துக்களின் இயல்பு குறித்த அரவிந்தரின் பகடியும் தமிழ் ஆர்வலர்களைச் சீற்றமடையச் செய்தன. வ.உ.சி-யின் எதிர்வினை கடுமையானதாக இருந்தது. தமிழ் எழுத்துகள் தமிழை எழுதுவதற்கானதுதானே தவிர மற்ற மொழிச் சொற்களை எழுதுவதற்கல்ல ளுக்கானதல்ல என்று வலியுறுத்திய வ.உ.சி., எழுத்துவடிவத்தைச் சீர்திருத்துவது மொழியின் மீதான வன்முறை என்று வாதிட்டார். மேலும், தமிழ் மொழியில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் எனும் குரல் ஏன் சம்ஸ்கிருத பற்றாளர்களிடமிருந்து மட்டுமே எழுந்துவருகிறது என்றும் அவர் பதிலடியை அளித்தார். இதனால் பாரதி புண்பட்டார்; இதற்கான சுருக்கமான மறுமொழியில் மொழியின் முன்னேற்றத்துக்கு மாற்றம் இன்றியமையாதது என்று பாரதி கூறியிருந்தார். ஆனால் அவர்கள் இருவருக்கிடையிலான பிணைப்பு இதுபோன்ற சித்தாந்த மோதல்களால் சிதைக்க முடியாத அளவுக்கு மிக ஆழமானதாக இருந்தது.

சுதேசி இயக்கத்தின் தோல்வி தேசபக்தர்களுக்கு வாழவாதாரத்திற்கும் போராட வேண்டியிருந்தது. பொருளீட்ட வ.உ.சி. செய்யாத முயற்சி இல்லையென்றால், உணர்வுரீதியாக உடைந்திருந்த பாரதி, தலைமறைவு வாழ்க்கையை முடித்துக்கொண்டு தன்னுடைய இறுதி நாட்களைக் கழிக்கச் சென்னைக்கு வந்துவிட்டார்.

இதற்கிடையில் அரசியல் பிளவுகளும் வெடிக்கக் காத்திருந்தன. காந்தியின் எழுச்சி திலகரின் தொண்டர்களை நிலைகுலைய வைத்திருந்தது. மகாராஷ்டிரத்தில் திலகரைப் பின்பற்றியோர் இந்து மகாசபையில் இணைய, தமிழகத்தில் திலகரின் தொண்டர்கள் காந்தியை நோக்கி நகர்ந்தனர். பாரதியோ தயக்கமின்றி காந்தியை மகாத்மா என்றழைத்தார். வ.உ.சி திலகரின் பாதையிலிருந்து வழுவாமல் காந்தியை அரசியல் ரீதியாக எதிர்த்து நின்றார். இந்த இருவேறு அரசியல் பாதைகள் இருவரின் நட்பை எப்படி பாதித்தது என்பதை அறிய சான்றில்லை.

1908-ல் கப்பலோட்டிய வ.உ.சி சிதம்பரம், 1920-ல் கோயம்புத்தூருக்குக் குடிபெயர்ந்து, குறைந்த ஊதியம் அளித்துவந்த எழுத்தர் பணியில் சேர்ந்தார். இருவரும் சந்தித்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் அத்தோடு நின்றுபோயின. செப்டம்பர் 1921-ல் பாரதி மறைந்த செய்தி நாளிதழ்ச் செய்தியாகவே வ.உ.சி-யை எட்டியது.

1933-ல் மரணிப்பதற்கு மூன்று ஆண்டுகள் முன்பாக வ.உ.சி தன்னுடைய நண்பர் குறித்து ஒரு நினைவுரையை எழுதினார். அவருடைய மறைவுக்குப் பின் வெளியான இந்த நினைவுரை வ.உ.சி-யின் உண்மையுணர்ச்சிக்கும் நேர்மைக்கும் சாட்சியமாக விளங்குகிறது. தன்னடக்கத்தோடு பாரதியின் மேதைமைக்குப் புகழுரை செலுத்துகிறார் வ.உ.சி.

தீவிர சைவர்கள் தம்முடைய இறுதிக் கணங்களில் திருவாசகம் கேட்பது வழக்கம். வ.உ.சி.யோ தன் மரணப்படுக்கையில் பாரதி பாடல்களைக் கேட்டார். தன் உற்ற நண்பருக்கு வ.உ.சி செலுத்திய உண்மை அஞ்சலி இது.

நன்றி: ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழ்

தமிழில்: ச.கோபாலகிருஷ்ணன்

ஆ.இரா.வேங்கடாசலபதி, ஆராய்ச்சி அறிஞர், 'ஆஷ் அடிச்சுவட்டில் – அறிஞர்கள், ஆளுமைகள்' உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in