‘சீனாவின் சுவாசநோய் பரவல், இன்னொரு கொரோனா பாதிப்பாக உருவெடுக்குமா?’ -எய்ம்ஸ் மருத்துவர் விளக்கம்

முகக்கவசத்துடன் சிறார்
முகக்கவசத்துடன் சிறார்

சீனாவை ஆட்டிப்படைக்கும் சுவாசம் சார்ந்த பாதிப்புகள், மற்றுமொரு கொரோனா பரவலுக்கான ஆபத்தாக உருவெடுக்குமா என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறது. இது எந்தளவுக்கு உண்மை என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

“சீனாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் சுவாச நோய்த்தொற்றுகள் அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பா மருத்துவ ஆய்வில் குழந்தைகளிடம் மைக்கோபிளாஸ்மா கண்டறியப்பட்டது. இதற்கு அப்பால் புதிய அல்லது அசாதாரண வைரஸ்கள் எதையும் அறிய இயலவில்லை. மேலும் இது கொரோனா போன்ற தொற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்பு இப்போதைக்கு இல்லை” என எய்ம்ஸ் மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

வைரஸ் சோதனை
வைரஸ் சோதனை

உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவிக்கும் அளவுக்கு, சீனாவில் நிமோனியா நோயால் தற்போது குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் குழந்தைகளின் சுவாச நோய்கள் மற்றும் நிமோனியா பாதிப்பு அதிகரிப்பு குறித்து விரிவான அறிக்கையை அளிக்குமாறு உலக சுகாதார அமைப்பு சீனாவிடன் தெரிவித்தது.

நிமோனியா பரவல் அபாயத்தைக் குறைக்க தடுப்பூசி பரிந்துரைக்கப்பட்டது. நோய் வாய்ப்பட்டவர்களிடமிருந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் உடல்நிலை சரியில்லாதவர்கள் சுயமாக தங்களை, தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது எனவும் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. இத்துடன் பரிசோதனை மற்றும் தேவைக்கேற்ப மருத்துவ சிகிச்சை பெறுதல், முகக்கவசம் அணிதல், நல்ல காற்றோட்டத்தை உறுதி செய்யதல், அடிக்கடி கைகளை கழுவுதல்’’ உள்ளிட்ட கொரோனா காலத்து வழிகாட்டுதல்கள் சீனாவுக்கு வழங்கப்பட்டன.

இதனை அடுத்தே சீனாவில் கொரோனாவுக்கு நிகரான அடுத்த பாதிப்பு தலைகாட்டத் தொடங்கியுள்ளதாக உலக மக்கள் மத்தியில் அச்சம் எழுந்தது. இந்தியா உட்பட அண்டை நாடுகள் பலவும் சீனாவின் சுகாதார அவசரநிலையை தீவிரமாக கவனித்து வருகின்றன.

தொற்றுப் பரவல்
தொற்றுப் பரவல்

இந்த சூழலில், ”சீனாவின் தற்போதைய நிமோனியா பாதிப்புகள், முந்தைய கொரோனாவுக்கு நிகரானவை இல்லை” என எய்ம்ஸ் மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர். இவற்றின் பின்னணியில் குளிர்காலத்தில் அடையாளம் காணப்படும் சாதாரண வைரஸ்களே இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

"சீனாவில் கொரோனா காலத்து ஊரடங்கு என்பது மிகவும் கெடுபிடியாக இருந்தது. கடந்த ஆண்டு டிசம்பரில் அது நீக்கப்பட்டது, அதன் பின்னர், வரும் முதல் குளிர்காலம் என்பதால் தற்போதைக்கு குழந்தைகள் எளிதில் தொற்றுக்கு ஆளாகிறார்கள். அவர்களின் உடல் போதிய எதிர்ப்பு சக்தி பெறும் வரை இந்த தொற்றுகள் அங்கே அதிகம் நிலவும்” என்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in