
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 லட்சத்தைக் கடந்துள்ளது.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி ஏராளமானவரைக் கொன்று குவித்த கொரோனா தொற்று தொடங்கி சுமார் 4 ஆண்டுகள் கடந்து விட்டது. தற்போது வரையிலும் கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வைத்திருக்கப்பட்டிருக்கிறதே தவிர முழுமையாக ஒழிக்கப்படவில்லை.
இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் தகவலின்படி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 69 கோடியே 63 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதில் 66 கோடியே 82 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 69 லட்சத்தை கடந்துள்ளது. 69,24,186 பேர் கொரோனா வைரஸால் உலகம் முழுவதிலும் உயிரிழந்துள்ளனர். தற்போதும் கூட உலகம் முழுவதும் 38,072 பேர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகப் பொருளாதாரத்தையே முற்றிலும் சீர்குலைத்து, பரபரப்பான நகரங்களை ஆள் அரவமற்ற சாலைகளாக மாற்றிய கொரோனா நவீன மருத்துவத்திற்கு சவால் விட்டபடி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.