
16 சதவீத மக்கள் வருமான வரியை முழுமையாக செலுத்துவதில்லை என வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் மற்றும் வருமான வரி தலைமை புலனாய்வு பிரிவு இயக்குனர் சுனில் மாத்தூர் தெரிவித்துள்ளார்.. வருமான வரிதுறையின் 164 வது தினக் கொண்டாடாடம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் மற்றும் வருமான வரி தலைமை புலனாய்வு பிரிவு இயக்குனர் சுனில் மாத்தூர் தலைமையில் நடைபெற்றது. இதில் இந்திய தொழில்நுட்ப கழகத்தின் இயக்குனர் வி.காமகோடி தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். முன்னதாக வருமான வரிதுறையின் மேம்படுத்தப்பட்ட செயலியை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் காமகோட்டி வெளியிட்டார். இதில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மூன்று மொழிகளில் செயலி மேம்படுத்தப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய சுனில் மாத்தூர் தமிழகத்தில் வருமான வரித்துறை சிறப்பாக செயல்படுகிறது எனவும் கடந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் தமிழ்நாட்டில் வருமான வரித்துறை மூலமாக பெறப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். நாட்டின் நேரடி வரி செலுத்துவதில் நான்காவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது என அவர் கூறினார். மும்பை,பெங்களூரு, டெல்லி ஆகிய இடங்களுக்கு அடுத்தபடியாக அதிக வருமான வரி செலுத்தும் இடத்தில் தமிழகம் இருப்பதாகவும் அவர் கூறினார். வருமான வரித்துறை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது சவாலாக உள்ளது என கூறிய அவர், வரும் காலங்களில் வருமான வரித்துறை பற்றி பொதுமக்களுக்கு முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார். இந்நிகழ்ச்சியின் இறுதியில் லிடியன் நாதஸ்வரனின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.