
கோதுமை பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில் மானிய விலையில் கோதுமை மாவு விற்பனையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. 'பாரத் ஆட்டா' என்ற பெயரில் டெல்லியில் கோதுமை மாவு விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்," மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், 'பாரத்' பிராண்டின் கீழ் கோதுமை மாவு (ஆட்டா) விற்பனை செய்வதற்கான 100 நடமாடும் வேன் வாகனங்களைப் டெல்லியில் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இதில் கோதுமை மாவு ஒரு கிலோவுக்கு ரூ. 27.50-க்கு மிகாமல் சில்லறை விலையில் கிடைக்கும். சாதாரண நுகர்வோரின் நலனுக்காக மத்திய அரசு எடுத்துள்ள தொடர் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். 'பாரத்' பிராண்ட் ஆட்டாவின் சில்லறை விற்பனையைத் தொடங்குவது சந்தையில் மலிவு விலையில் விநியோகத்தை அதிகரிக்கும்.
மேலும் இந்த முக்கியமான உணவுப் பொருளின் விலை குறைய உதவும் என்று கூறியுள்ளது. முதற்கட்டமாக நடமாடும் விற்பனை மையங்களிலும், மற்ற கூட்டுறவு அமைப்பின் கீழ் செயல்படும கடைகளிலும் இந்த பாரத் ஆட்டா கிடைக்கும்" என கூறப்பட்டுள்ளது.