வீடு,வாகனம், தனிநபர் கடன்களின் வட்டி அதிகமாகும்: ரெப்போ விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி

சக்தி காந்ததாஸ்
சக்தி காந்ததாஸ்

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5% உயர்த்தப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்காக ரெப்போ வட்டி விகிதம் 50 பிபிஎஸ் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ரெப்போ வட்டி விகிதத்தை 5.4 சதவீதத்திலிருந்து 5.9 சதவீதமாக உயர்த்த பணவியல் கொள்கைக் குழு முடிவு செய்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். 2022 மே மாதம் முதல் இதுவரை 4 முறைகளில் ரெப்போ வட்டி விகிதம் 1.9% உயர்த்தப்பட்டுள்ளது.

7 சதவீதமாக நீடிக்கும் சில்லறை பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் வட்டிவிகிதம் உயர்ந்ததன் காரணமாக தனி நபர் கடன், வாகனக்கடன், வீட்டுக்கடன், தொழில் கடன் போன்ற கடன்களுக்கான வட்டிவிகிதம் அதிகமாகும்.

முன்னதாக, மே மாதத்தில் ரெப்போ வட்டி விகிதம் 40 பிபிஎஸ் உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் 50 அடிப்படைப் புள்ளிகளும், ஆகஸ்ட் மாதத்தில் 50 அடிப்படைப் புள்ளிகளும் உயர்த்தப்பட்டன.

ரெப்போ வட்டிவிகித உயர்வை அறிவித்த சக்திகாந்த தாஸ், நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம், எப்போதும் கவனமாக இருக்கிறோம், எப்போதும் பாடுபடுகிறோம் என்ற மகாத்மா காந்தி வாக்கியத்தை மேற்கோள் காட்டினார். மேலும், "உலகப் பொருளாதாரம் புயலின் கண்ணில் உள்ளது, ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா பல அதிர்ச்சிகளைத் தாங்கியுள்ளது. இப்போது பணவீக்கம் 7 ​​சதவீதமாக உள்ளது. இந்த நிதியாண்டின் இரண்டாவது பாதியில் இது 6 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் போர் உள்ளிட்ட புவிசார் அரசியல் பதற்றங்களின் பின்னணியில் ஏப்ரல் 2022 முதல் தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in