ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீதமாக உயரும் ஜி.எஸ்.டி!

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி

குதிரைப் பந்தயம், கேசினோ மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளுக்குச் சேவை வரியை 28 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அடுத்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத் தொடரில் விவாதம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேசினோ, குதிரைப் பந்தயம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தற்போது 18 சதவீத ஜி.எஸ்.டி. வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதற்குச் சிறப்பு மதிப்பிட்டுக் கூடுதல் வரி விதிப்பது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு கடந்த ஆண்டு முடிவு செய்தது. மேலும் மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றையும் மத்திய அரசு நியமித்தது. மேகாலயா முதல்வர் கன்ராட் சங்மா தலைமையில் தமிழக நிதியமைச்சர் உள்ளிட்ட 8 மாநில அமைச்சர்கள் அடங்கிய குழுவினர் மேற்கண்ட பொழுது போக்கு மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு வரிவிதிப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

மே மாத தொடக்கத்தில் 3 சேவைகளின் வரியை 18-ல் இருந்து 28 சதவீதமாக உயர்த்துவது என அமைச்சர்கள் அடங்கிய குழு முடிவு செய்தது. இது குறித்து நேற்று மீண்டும் இந்த குழுவினர் கூடி விவாதித்தனர். ஆன்லைன் விளையாட்டு, கேசினோ, குதிரைப் பந்தயம் உள்ளிட்டவற்றிற்கான சேவை வரியை 28 சதவீதமாக உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் அதற்கான சேவைகளை மதிப்பிடும் முறையும் இறுதி செய்யப்பட்டது. அமைச்சர்கள் அடங்கிய குழுவினர் நடத்திய கூட்டத்தில் எடுக்கப்பட்ட அறிக்கையை ஓரிரு நாட்களில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சமர்ப்பிக்க உள்ளதாக கன்ராட் சங்மா கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in