‘சமத்துவமின்மையில் அங்கம் வகிக்க மாட்டேன்’ - பாடகி தீ உறுதி!

‘சமத்துவமின்மையில் அங்கம் வகிக்க மாட்டேன்’ - பாடகி தீ உறுதி!

2021 மார்ச் மாதம் வெளியான ‘எஞ்சாய் எஞ்சாமி’ என்ற தனிப்பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், கடந்த சில நாட்களாகப் பெரும் சர்ச்சையிலும் அடிபடுகிறது. அறிக்கை, விளக்கம், மறுப்பு என இந்தப் பாடல் குறித்த பரபரப்புச் செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் இந்தப் பாடல், மேடையில் அரங்கேற்றப்பட்ட நிலையில், இப்பாடலை உருவாக்கியவர்களில் ஒருவரான பாடகர் அறிவு அந்நிகழ்ச்சியில் இடம்பெறாதது சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அறிவு ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டார். அதற்குப் பதில் தரும் வகையில் சந்தோஷ் நாராயணன் ஒரு நீண்ட விளக்கம் அளித்தார்.

இப்போது இது குறிச்சு பாடகி தீ நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘எஞ்சாயி எஞ்சாமி பாடலின் ஒவ்வொரு கட்டத்திலும் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவருக்கும் உரிய அங்கீகாரம் வழங்கியுள்ளேன். ஒவ்வொரு முறையும் எனக்குக் கிடைத்த வாய்ப்புகளில் அவர்கள் இருவரையும் பற்றி, குறிப்பாக அறிவு குறித்து பெருமையுடனே பேசியுள்ளேன். அவர்கள் இருவரின் முக்கியத்துவத்தை எந்தக் கட்டத்திலும் நான் குறைத்து மதிப்பிட்டது கிடையாது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மேடையிலும் இருவரின் பங்களிப்பை முன்னிலைப்படுத்துவதைச் செய்துவருகிறேன்.

அதேநேரம், எங்களது பணி குறித்து மற்றவர்களால் பகிரப்படும் விளம்பரங்களில் எனக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. இயக்குனர் மணிகண்டனும், அவரின் `கடைசி விவசாயி' திரைப்படமும் 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் உருவாக்கத்துக்கு பெரிய உந்து சக்தியாக அமைந்தனர். 'எஞ்சாய் எஞ்சாமி' பாடல் வரிகளும், அதன் உருவாக்கமும் எங்களது அணியால் விவாதிக்கப்பட்டே செம்மைப்படுத்தப்பட்டது. பாடல் வெளியாகும்வரை நாங்கள் அனைவரும் ஒரே பக்கத்தில்தான் இருந்தோம்’ என தீ தெரிவித்திருக்கிறார்.

மேலும், ‘பாடலுக்கான அர்த்தங்கள் மற்றும் அதன் கதைகள் பெரும்பாலானவற்றைப் பாடல் வெளியான பின் அறிவின் ஒவ்வொரு பேட்டி மூலமாக நான் தெரிந்துகொண்டேன். அறிவு சொன்னது மிகவும் முக்கியமானது மட்டுமல்ல முதன்மையானது என நம்பி, அவரது குரல் எப்போதும் ஓங்கி ஒலிக்க வேண்டும் என விரும்பினேன். பாடல் மூலம் கிடைத்த அனைத்து வருமானம் மற்றும் உரிமைகளும் எங்கள் மூவருக்கும் சமமாகப் பகிரப்பட்டன. 'எஞ்சாய் எஞ்சாமி' எட்டிய உயரங்களை அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து அனுபவிக்கவே ஆசைப்பட்டேன். ஏதேனும் ஒரு வாய்ப்பு அதில் சமத்துவமின்மையாக இருந்தால் ​​நிச்சயம் அதன் ஒரு பகுதியாக நான் இருக்கமாட்டேன்.

கடந்த ஆண்டு வெளியான ரோலிங் ஸ்டோன் இந்தியா இதழின் அட்டைப்படத்தில் நானும், ஷானும் இடம் பெற்றிருந்தோம். எங்கள் கூட்டணியில் (தீ மற்றும் ஷான்) அடுத்து வரவுள்ள ஆல்பத்துக்கான அட்டைப்படமே அது. மற்றபடி, அது ‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடலுக்கானதோ அல்லது ‘நீயே ஒளி’ பாடலுக்கானதோ அல்ல. அந்த அட்டைப் படத்திலும் அந்தப் பாடல் பெயர்கள் குறிப்பிடப்பவில்லை. அறிவு, சந்தோஷ் நாராயணன் மற்றும் மஜ்ஜா இசை நிறுவனத்தின் கலைஞர்கள் பற்றிய கட்டுரைகளை ரோலிங் ஸ்டோன் வெளியிட இருக்கிறது என்பது எனக்கு தெரிவிக்கப்பட்டது. எங்களின் அட்டைப்படம் வெளியாகும் முன்பே ரோலிங் ஸ்டோன் இதழ் ஒரு ட்வீட்டில் அறிவித்தது. அந்த அறிவிப்பைக் கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன்.

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் என்னுடன் பங்கேற்பதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவையும் அணுகினர். அறிவு அமெரிக்காவில் இருந்ததன் காரணமாக அவரால் பங்கேற்க முடியாததை அடுத்து அவர் குரலை நிகழ்ச்சியில் பயன்படுத்திக்கொண்டோம். தனது குரலுக்காகவும், பாடலில் அவரின் பங்களிப்புக்காகவும் நிகழ்வில் அறிவு பேசப்பட்டார். 'எஞ்சாயி எஞ்சாமி' பாடலை உருவாக்கியதற்காக சந்தோஷ் நாராயணன், அறிவு, மஜ்ஜா உள்ளிட்ட ஒட்டுமொத்த குழுவின் ஆதரவிற்கும் என் இதயத்தின் அடியாழத்திலிருந்து நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தப் பிரபஞ்சத்தின் மீதும் உயிர்கள் மீதும் கொண்டுள்ள அன்பு, மரியாதையின் பொருட்டால் சக கலைஞர்களால் 'எஞ்சாய் எஞ்சாமி' பாடல் பிறந்தது. என்னைப் பொறுத்தவரை, அது எப்போதும் அப்படியே இருக்கும். உண்மை எப்போதும் வெல்லும்’ என பாடகி தீ குறிப்பிட்டிருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in